புலவர் சிவ. கன்னியப்பன் 283

வெப்பமுடன் வெள்ளையரை விரட்ட வென்றே
       வேலூரில் விரைந்தெழுந்து புரட்சி செய்து,
செப்பரிய துணிவுடைய செயல்க ளாற்றித்
       தியாகத்தில் உயிர்துறந்த சிப்பாய் கட்கும்
இப்பெரிய திருநாளில் வணக்கம் செய்வோம்
       இந்தவிழாச் சிறப்பினுக்குத் தகுந்த தாகும்.       20

பதினான்கு வருடங்கள் அதற்கும் முன்னால்
       பாஞ்சாலங் குறிச்சி, தமிழ்ப்பா ளையத்தில்
அதிவீரப் போர்புரிந்த அஞ்சா நெஞ்சன்
       ஆங்கிலரை ஆட்டிவைத்த கட்ட பொம்மன்
சதிகார வெள்ளையரால் தூக்கில் மாண்ட
       சரித்திரமே விடுதலைக்குத் தலைப்போ ராகும்;
அதனோடு மருதிருவர் ஊமைத் துரையாம்
       அவர்களுக்கே அஞ்சலிமுன் செலுத்த வேண்டும்.       21

பொன்னனைய சுதந்தரத்தை இழந்து விட்டுப்
       பொழுதெல்லாம் நொந்துமனம் புழுங்கி நின்றாள்
அன்னியர்க்கிங் கடிமையென அவதி யுற்றநன்
       அன்னையிந்த பாரதத்தாய் அவலம் நீங்கிப்
பின்னுமவள் தன்னாசைப் பெறுமா றெண்ணிப்
       பேராண்மை யோடுபல தியாகம் செய்து
முன்னமிங்கே உயிர்துறந்த யாரா னாலும்
       முடிவணங்கி அவர்பெருமை முழங்கச் செய்வோம்.       22

இச்சைபோல் சுதந்தரமாய் இயங்கும் ஆசை
       ஈஎறும்பு புழுக்களுக்கும் இருப்ப துண்மை;
பிச்சைகேட் டுடல்வளர்க்கும் ஏழை கூடப்
       பிறர்க்கடிமை என்றிருக்கப் பிணங்கு மன்றோ.
அச்சத்தால் அடிமைசெய்யும் கோழைகூட
       அந்நிலையை அகற்றிடவே ஆசை கொள்வான்.
மெச்சத்தான் தக்கதிந்த சுதந்த ரத்தின்
       மேன்மைதனை நன்குணர்ந்து மிகவும் காப்போம்.       23