தீமையை வெறுத்து நீக்கும் தீரமாய்த் திகழ்வாய் நீயே வாய்மையில் எனக்கும் அந்த வலிமையை வழங்க வேண்டும்; தாய்மையின் சகிப்பு நீயே தந்தருள் சகிப்புத் தன்மை; தூய்மைசேர் ஒழுக்க வாழ்வில் துலங்கிடும் ஆன்மஜோதி. 2 உடலினும் உயிருக் கப்பால் உயர்ந்தொளிர் ஆன்மசக்தி! கடலினும் பெரிதாம் உன்றன் கருணையில் மூழ்கச் செய்வாய்! அடைவரும் அமைதி தந்தே அன்பெனும் அமுத மூட்டி மடமைகள் யாவும் மாற்றி மங்களம் அருள்வாய் போற்றி. 3 16. ஏழை நெஞ்சே! எண்ணரிய நெடுங்காலம் இடைய றாமல் எண்ணியெண்ணித் தவவலிமை உடைய ராகித் திண்ணியமெய் யறிவறிந்து தெளிந்த முன்னோர் பண்ணியநற் பழக்கமெல்லாம் பழித்தாய் நெஞ்சே! 1 எத்திசையும் பிறநாட்டார் ஏற்றிப் பேசும் பத்திமிகும் இலக்கியத்தின் மணமே வீசும் முத்தமிழின் வழிவந்தும் முன்னோர் தம்மைப் பித்தரென்றே எண்ணுகின்றாய் பேதை நெஞ்சே! 2 நாத்திகர்தான் நாகரிகச் சின்னம் போல மூத்தறிந்த முன்னோரைப் பின்னம் பேசிச் சூத்திரத்தில் ஆடுகின்ற பொம்மை யேபோல் சொந்தபுத்தி இழந்துவிடல் நன்றோ? சொல்வாய்.3 |