இப்படிப் பலபேர் ஏமாந்து போவதால் பெண்மனம் என்பதைப் பிழைபடப் பேசிப் 20 ‘புதிர்‘ என்று சொல்வது புரியாத் தனமே; ‘வஞ்சனை‘ என்பர் வஞ்சகம் உடையோர். குறிப்புரை:- வஞ்சனை - பொய், மாயம். 201. குறத்தியர் பாட்டு இமயம்முதல் குமரிவரை எங்களுடை நாடு இடையிலுள்ள தேசமெல்லாம் எங்களுக்கு வாசம் தமிழ் முனிவன் பொதிகைமலை தன்னில்எங்கள் வீடு தரணியெல்லாம் சுற்றிடுவோம் தைரியம்தான் ஜோடு. 1 ஜாதியில்லை மதமுமில்லை சண்டையில்லை அதனால் சாமியென்றும் நேமம்என்றும் சடங்குகளும் இல்லை; நீதிஎன்ற ஒன்றுமட்டும் நெஞ்சிலுண்டு பின்னே நீசர்என்று எங்களையார் பேசினாலும் என்னே? 2 பட்டமில்லை பதவியில்லை பகையுமில்லை ஐயே! பணமுமில்லை திருடர்என்ற பயமுமில்லை மெய்யே. கஷ்டமில்லை நஷ்டமில்லை கவலையில்லை அம்மா! காணியில்லை பூமியில்லை கடனுமில்லை சும்மா! 3 மலையினிலே குடிசைகட்டி மரநிழலில் வாழ்வோம் மான்மயிரும் தேன்முதலாய் மக்களுக்கு விற்போம்; தலையினிலே இடிவரினும் தைரியமாய் ஏற்போம் தஞ்சமற்ற யாரையுமே அஞ்சிடாமல் காப்போம். 4 எந்தபாஷை எந்த நாட்டில் என்னபேச்சு எனினும் எங்களுக்குப் பேதமில்லை எதையும்பேசத் துணிவோம் சொந்த பாஷைப் பெருமைக்காக நூறு சொல்ல மாட்டோம் சுற்றிச்சுற்றி எங்கும்சென்று சுகமுரைத்துக் கேட்போம். 5 |