புலவர் சிவ. கன்னியப்பன் 323

வேலையில் லாதவர் யாருமில்லை - முற்றும்
       வீணருக்(கு) அங்கே வேலையில்லை
கூலியில் லாதவர் யாருமில்லை - சும்மா
       கும்பிட்டுத் தின்கின்ற கும்பலில்லை.       7

கூனும் குருடனும் நொண்டி முடங்களும்
       கொஞ்சம்; அவருக்கும் பஞ்சமில்லை.
தானம் கொடுப்பதுஎன்(று) இல்லாமல் - பொது
       தர்மம் என்றே வைத்துத் தாங்கிடுவார்.       8

ஒப்பி மனங்களித்(து) எல்லோரும் - அங்கே
       உண்டு உடுத்துக்க ளித்திடுவார்
தப்பிதம் செய்திடத் தோன்றாதே - அதன்
       தண்டனை தந்திட வேண்டாது.       9

வாது வழக்குக்கு நேரமில்லை - அங்கே
       வஞ்சித்து வாழமு டியாது
சூதுசெய் பந்தயம் ஏதுமில்லை முற்றும்
       சோம்பிச் சகிக்க வழியுமில்லை.       10

கள்ளைக் குடிப்பது கூடாது - அங்கே
       காமக் கலகங்கள் கண்டதில்லை.
கொள்ளை அடித்திடத் தேவையில்லை - என்றும்
       கொஞ்சமும் யாருக்கும் பஞ்சமில்லை.       11

காவிரி நீர்வற்றிப் போவதில்லை - ஒரு
       கால்வாய் மேஸ்திரி எங்குமில்லை;
காவலும் கட்டுகள் ஏதுக்குஅங்(கு) எப்போதும்
       கள்ளர் பயம்என்ற சள்ளையில்லை.       12

பண்ணையக் காரர்கள் எல்லாரும் - எங்கும்
       பட்டினி என்கிற சொல்லேது?
கண்ணியம் அற்றவர் யாருமில்லை - ஒரு
       காலித்தனம் பண்ண ஏலாது.       13