மாற்றலர்க்கு இடங்கொடுத்(து) ஏழை மக்களைப் பிழிந்துடல் வளர்த்தாய் கூற்றுவன் கணக்கிடும் நாளில் கூறுவை பதில்என்ன மனமே! வீற்றிருந்து ஆண்டஉன் அரசை விற்றுடல் சோம்பினை இனிமேல் ஆற்றுவை இப்பழி அகற்ற அன்னையின் விடுதலைக்கறமே. 4 சொந்த சுதந்தரம் மறந்தாய் சோற்றினுக்கு உடல்சுமந்து இருந்தாய். பந்தம் கன்றிட நினையாய் பாரதத் தாயினைப் பாடாய் அந்தமி லாதவன் செல்வம் அன்னியர்க்(கு) இழந்தனை குடிகள் கந்தையும் கஞ்சியும் அற்றார் காரணம் நீயெனக் கருதாய். 5 அடிமையிற் பழகினைப் பொழுதும் ஆண்மையை மறந்தனை முழுதும் குடிமுறை குறைந்தனை சிறிதும் குலமுறை நினைந்திலை பெரிதும் மிடிமையிற் கிடந்ததுன் நாடு மேன்மையை இழந்ததுன் வீடு மடமையில் மயங்கியிப் பிறப்பின் மகிமையை மறந்தனை மனமே! 6 கொண்டவள் குலக்கொடி வாடக் கூத்தியர் மையலிற் குறையும் வண்டர்கள் எனவல்ல முன்னோர் வழக்க ஒழுக்கத்தை மறந்து கண்டவர் சிரித்திடக் களித்து கற்றவர் மொழிகளைப் பழித்தாய் அண்டிய அயலவர் மயக்கால் அழித்தனை மனையறம் அறிவோ? 7 |