புலவர் சிவ. கன்னியப்பன் 349

ஜாதியை மதத்தினைப் பழித்துச்
       சண்டையில் உவந்தனை மனமே
வாதுகள் மிகுந்தன நாட்டில்
       வறியவர் வரிகளால் வருந்த
ஏதுஇனி விடுதலை எனவே
       யாவரும் ஏங்கினர் நல்லோர்
ஓதிய ஒற்றுமைக்(கு) உழைத்தே
       ஒப்புற ஒழுகுவை உயர்வாய்       8

தேனுள்ள தாமரை மேலே
       தினமுள்ள தவளையைப் போலே
நானுள்ள இப்பெரும் நாட்டின்
       ஞாலம்எல் லாம்திரண் டாற்போல்
ஊனுள்ள தேகத்தி னோடும்
       உன்முன்னே காந்தியொன் றுற்றும்
ஏனென்ன என்றிலை மனமே
       இருந்தென்ன போயென்ன நீயே!       9

ஆண்டவன் உனக்கென்ற நாட்டில்
       அன்னியர்க்கு அரசளித்து அடிமை
பூண்டுடல் வளர்த்தனை நெஞ்சே!
       புண்ணியம் உனக்கிலை; நரகே.
மீண்டும்உன் நாட்டினை மீட்க
       மெய்ப்பொருள் ஆவியும் ஈந்தே
ஆண்டுதொழில் புரிகுவை யாயின்
       ஆன்ம சுதந்தரம் அடைவாய்.       10

குறிப்புரை:-பூதங்கள் - பூதங்கள் ஐந்து. நிலம், நீர், நெருப்பு,
காற்று, ஆகாயம்; சாதம் - சோறு; கூற்றுவன் - எமன்;
ஆவி - உயிர்; தேகம் - உடல்; மிடிமை - வறுமை;
ஏத்தன் - புகழ்வோன் (இறைவன்); ஞாலம் - உலகம்;
வண்டர்கள் - மங்கலப் பாடகர்கள்; வாதுகள் - வழக்குகள்;
கன்றிட - மிகுந்திட, முதிர்ந்திட.