அன்னியர் இங்கே உள்ளவர் யாரும் அண்டிப் பிழைத்திட வந்தவரே! என்னுடை ஏவல் சொன்னதைச் செய்தோர் என்னை அடக்குதல் இன்னுமுண்டோ? 1 என்னுடைக் காடு என்னுடைப் பாடு என்றன்வெள் ளாமையை யார் அறுக்க? மன்னவன் நானே மந்திரி என்ஆள் மற்றவர் யாரிதை ஒத்துக்கொள்ள! சொன்னதைச் செய்த பண்ணையைக் காக்கச் சோற்றுக்கு வந்தவன் மாற்றியதேன்? இன்னமும் இந்தச் சின்னத் தனத்தில் ஏங்கிக் கிடந்திடத் தூங்குவனோ! 2 என்னுடைப் பெட்டி என்னுடைத் துட்டு யாரிடம் சாவி இருத்தல்சரி? பொன்னையும் வெள்ளிச் செம்புஎன் றாலும் பூட்டவும் நீட்டவும் என்பொறுப்பு; சின்னப் பயலோ நான் சித்தம்கெட் டேனோ சீச்சீ! ஏன்இந்த ஏச்செனக்கு? மன்னவன் நானே மந்திரி வைப்பேன் மற்றவர் யாருடைச் சித்தம்அது? 3 மந்திரி நானே மன்னவன் ஆவேன் மற்றவர் யாருக்குக் குற்றம்இதில்? இந்திய நாட்டில் நொந்தவர் இன்றி இன்அர சாக்குவேன் என்னரசை! அந்தமி லாதான் ஆண்டவன் தந்தான் ஆரிய நாடுஎன்றன் ஆட்சியன்றோ! சிந்திய செல்வம் சேகரம் செய்து சீக்கிரம் பாக்கியம் ஆக்கிவைப்பேன்! 4 குறிப்புரை:- சித்தம் - அறிவு; நொந்தவர் - வருந்தியவர்; அந்தமிலான் - முடிவு இலான்;மன்னவன் - அரசன்; சீக்கிரம் - விரைந்து; பாக்கியம் - செல்வம்; மற்றவர் -அயலவர். |