புலவர் சிவ. கன்னியப்பன் 367

227. புது வழி

எத்திசையில் எம்மொழியில் எவர்வாய்ச் சொல்லில்
       எப்படியாய் வரும்கதைகள் எதுவா னாலும்,
சத்தியத்தின் வழிகாட்டும் அறிவை எல்லாம்
       தமதாக்கிக் கலைவளர்த்த தமிழர் நாட்டில்,
இத்தினத்தே கூட்டியுள்ளோம் இனிதே எண்ண
       இந்தியத்தாய் சுதந்தரத்தை எய்தும் மார்க்கம்
நித்தியமாம் அறங்களையே நினைவில் வைத்து
       நிந்தையில்லாச் செயல்முறைகள் நிறுவ வேண்டும்.       1

மன்னவரைச் சதிபுரிந்து வெட்டி மாய்த்தும்,
       மாறுபட்ட கருத்துடைய வார்த்தை ஒன்றைச்
சொன்னவரைச் சுட்டெரித்தும் துன்மார்க் கத்தால்
       அயல்நாட்டைப் படையெடுத்துத் துன்பம் செய்தும்,
இன்னபல கொடுமைசெயும் பிறநாட் டாரை
       இந்நாட்டின் விடுதலைக்கும் பின்பற் றாமல்
முன்னையநம் நாகரிகம் முரண்ப டாமல்
       முடிவுசெய்வீர் சுதந்தரப்போர் முறைகள் எல்லாம்.       2

அடிமைகொளும் நம்விலங்கை அகற்ற வேண்டும்;
       அதையும்உயர் அன்பின்வழி அகற்ற வேண்டும்;
கொடுமைசெயும் வழக்கமெல்லாம் கொளுத்த வேண்டும்;
       ஒருவருக்கும் கொடுமையின்றிக் கொளுத்த வேண்டும்;
‘முடியுமெனில் அப்படியே முடிப்போம்; இன்றேல்
       முயற்சியொடு நாமெல்லாம் முடிவோம்‘ என்னும்
திடமதுதான் தீரமொடு வீர மாகும்;
       தெரிந்துரைகள் அதற்குதவச் செப்பு வீரே.       3

ஒருபதியில் ஒருசாதி ஒரும தத்தார்
       ஒன்றாகச் சேர்ந்திருந்தார் உறவாய் என்னும்
மருவாத பழங்கால நிலைமை எல்லாம்
       மலையேறிப் போனதுகாண்; மண்மேல் இந்நாள்