வான்முறைமழைபெய் யாது மாநிலம் வளமை குன்றும் கோன்முறை கோணும் மற்றும் குடிவளம் குறைந்து வாடும் சாண்வயி(று) அதற்குக் கூடச் சரிவரக் கிடைக்காது ஊணும் தான்எனும் அகந்தை நீத்த தவசிகள் குறைந்த நாட்டில். 2 அன்னஅத் துறவு பூண்டோர் அரிதுஎனப் போன தாலோ சொன்னவர் துறவி என்றோர் தூய்மையில் குறைந்த தாலோ முன்னைய வளங்கள் குன்றி முதுமறைப் பெருமை விட்டுக் குன்றிய வாழ்க்கை வந்து குறைந்ததுஇப் பரத நாடு. 3 அக்குறைநீங்க வென்றே ஆண்டவன் அனுப்ப வந்தோன் இக்கணம் இந்த நாட்டின் இருள்மிகும் அடிமை நீங்க முக்குணம் அவற்றுள் போற்றும் முதற்குணம் வழியே காட்டும் சத்குரு வான காந்தி சத்திய சீலன் தானே. 4 தாங்கண்டஇன்பம் இந்தத் தரணியோர் பெறுமாறு எண்ணி ஆங்குஎன்றும் ஈங்குஎன்று ஓடி அறப்பறை அடிக்கும் காந்தி தீங்குஎன உலகம் சொல்லும் செய்கையோர் சிறிதும் இல்லார் நாங்கொண்ட பெருமை எங்கும் நல்லவர் யாருங் கொள்வார். 5 |