புலவர் சிவ. கன்னியப்பன் 441

செவிநாடும்கீர்த்தனைக்குத் தியாகர் இல்லை
       தேசீய பாரதியின் திறமும் இல்லை
புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து
       புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்த்த
உவமானம் வேறுஎவரும் உரைக்க ஒண்ணா
       உத்தமராம் காந்தியரை உவந்து பேச.       1

சொல்லுவதுஎல்லார்க்கும் சுலப மாகும்
       சொன்னபடி நடப்பவர்கள் மிகவும்சொற்பம்
எல்லையின்றி நீதிகளை எழுது வார்கள்
       எழுதியது பிறருக்கே தமக்குஎன்(று) எண்ணார்
தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள்
       சொன்னதுபோல் செயல்முயன்றார்இவரைப் போல
இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி
       இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்.       2

கொலைகளவுபொய்சூது வஞ்சம் ஆதிக்
       கொடுமைகளே வித்தைகளாய் வளர்த்துக்கொண்டு
தலைசிறந்த பிறவியென்னும் மனித வர்க்கம்
       சண்டையிட்டு மடிவதனைத் தடுக்க வேண்டி
உலகிலுள்ள மனிதர்எல்லாம் கலந்து வாழ
       ஒருவராய்த் தவம்புரிய உவந்த காந்தி
விலைமதிக்க முடியாத செல்வம் அன்றோ?
       வேறுஎன்ன நாட்டிற்குப் பெருமை வேண்டும்?       3

புத்தர்பிரான்பெருந்துறவைப் படிக்கும் போதும்
       போதிமர நிழல் ஞானம் நினைக்கும்போதும்
கர்த்தர்பிரான் ஏசுமுன்னாள் சிலுவை தன்னில்
       களிப்போடே உயிர்கொடுத்த கதையைக்கேட்கும்
சத்துருவாய்ச் சொல்லவந்தோர் தமையும் காத்த
       தயைமிகுந்த நபிகளின்பேர் சாற்றும்போதும்
உத்தமரைக் கண்டோமா என்னும் ஏக்கம்
       ஒவ்வொருநாள் நமக்குஎல்லாம் உதிப்பதுஉண்டே!       4