புலவர் சிவ. கன்னியப்பன் 473

கடவுளை நேரில் கண்டதில்லை; அவரைக்
       கண்டவர் என்றவர் விண்டதில்லை.
அடைவரும் அந்தக் கடவுளும் காவேரி
       ஆற்றின் பெருமையில் தோற்றதுபார்.       2

வெள்ளப் பெருக்கினைப் பார்க்கையிலும், அதன்
       வேகத்தின் சித்தத்தைக் கேட்கையிலும்,
உள்ளம் திகைத்தோர் உண்மை அறிவினை
       ஊட்டுது; தெய்வத்தைக் காட்டுதுபார்.       3

ஆலம ரத்தையும் வேர்பறித்தே, அதை
       ஆட்டி உருட்டி அடித்துக்கொண்டு
காலனும் கண்டால் நடுங்க வருகின்ற
       காட்சியும் யாருடைச் சூழ்ச்சியினால்?       4

காடும் மலையும் கிடுகிடுக்க, அந்தக்
       காட்டு மிருகங்கள் ஓட்டமிட
ஓடும் நதியிலே அத்தனை தண்ணீரை
       ஊற்றுவ தார்?என்ற மாற்றம் வரும்.       5

ஆனை சிறுத்தைகள் அஞ்சிப் பதுங்கிட
       ஆட்டையும் மாட்டை அடித்துக்கொண்டு
சேனை யிலும்கடு வேகத்துடன் வரும்
       சீக்கிரம் யாருடை ஆக்கினையோ!       6

மேட்டில் அணையென்று போட்ட சுவர்களில்
       மெள்ளமெள்ள அதன் கல்லரைக்கும்
ஓட்டத்து டன்வரும் ஊட்டத்தைக் கண்டுநம்
       உள்ளத்தில் எண்ணங்கள் துள்ளுதுபார்.       7

நேற்று நடந்திட்ட மக்களின் பாதங்கள்
       நீற்று நெருப்பெழக் கொப்புளித்த
ஆற்றிலே இன்றைக்கும் அத்தனை தண்ணீர்
       அப்படி வந்ததும் எப்படியோ!       8