62நாமக்கல் கவிஞர் பாடல்கள்

‘சங்கீதம் பாடுதற்கும் மொழிக்கும் என்ன
       சம்பந்தம்?‘ என்றெவரும் சாதிப் பாரேல்,
இங்கேதும் தடையில்லை; ஏற்றுக் கொள்வோம்;
       எல்லாமே தமிழ்ப்பாட்டா யிருந்தா லென்ன?
சிங்கார வாதங்கள் பலவும் பேசிச்
       சிறப்பான முயற்சியிதைச் சிதைக்க லாமோ;
தங்காமல் தயங்காமல் தளர்ந்தி டாமல்
       தமிழ்நாட்டார்; இச்செயலைத் தாங்க வேண்டும்.       6

கேட்டிருந்தார் பாடினவர் எல்லாம் சேர்ந்து
       கெடுத்துவிட்ட காரியத்தைக் கிண்டிக் கிண்டி
நாட்டிலின்னும் இதற்குமொரு சண்டை யின்றி
       நல்லஒரு தமிழ்ப்பண்ணை நடத்த வேண்டும்;
பாட்டினுடன் இலக்கியமும் படியப் பாடிப்
       பருந்தோடு நிழல்செல்லும் பான்மை காப்போம்;
கூட்டமிட்டுப் பேசிவிட்டு மறந்திடாமல்
       குற்றமிதைத் தமிழ்நாட்டிற் குறைக்க வேண்டும்.       7

பலநாட்டுச் சங்கீதம் நமக்கு வேண்டும்;
       பற்பலவாம் முறைகளையும் பழக வேண்டும்;
விலைகூட்டிக் கலையறிவை வாங்கி யேனும்
       விதம்விதமாய்த தமிழ்மொழியில் விரிக்க வேண்டும்;
அலைநீட்டும் கடல்கடந்த அறிவா னாலும்
       அத்தனையும் தமிழ்வழியில் ஆக்க வேண்டும்;
நிலைநாட்டித் தமிழ்க்கலைகள் வளர்ச்சிக் கென்றே
       நிச்சயமாய் உழைக்கஒரு நிலையம் வேண்டும்.       8

ஆதலினால் தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டிற்கே
       ஆதரவிங் ககத்தியமாய் அதிகம் வேண்டும்;
காதலினால் தாய்மொழியைக் காப்ப தன்றிக்
       கடுகளவும் பிறமொழிமேற் கடுப்ப தல்ல;
தீதல்லா திம்முயற்சி சிறப்புற் றோங்கத்
       திருவருளைத் தினந்தினமும் தொழுது வாழ்த்தி