வந்தஎந்தப் பிறமொழிக்கும் வரவு கூறி வகைசெய்து வாழ்வளித்து வரிசை யெல்லாம் தந்தவர்கள் தமிழரைப்போல் வேறு யாரும் தாரணியில் இணைசொல்லத் தருவா ருண்டோ? அந்தப்பெருங் குணத்திலின்னும் குறைவோ மில்லை; ஆனாலும் தமிழினங்கள் வாழ வேண்டின் சொந்தமொழிக் கலைகளெல்லாம் சுருங்கித் தேயப் பார்த்திருந்தும் சோம்புவதும் அறிவோ சொல்லீர். 2 முக்கிமுக்கிப் பயின்றுபல முயற்சி செய்து முக்காலும் வாக்குரைத்து மூச்சு வாங்கத் திக்குமுக்க லாடுகின்ற பாஷைக் கெல்லாம் சிறப்பாகும் சங்கீதத் திறமை யென்றும் சிக்குமுக்காம் உச்சரிப்பு சிறிதும் வேண்டாச் சீரிலகும் எழுத்தியல்பு சேர்ந்த தாகித் தக்கமிக்கோர் இனிமையெனும்தமிழில் நாதச் சங்கீதம் குறைவென்றால் தரிக்க லாமோ? 3 நாதமெனும் பிரமத்தைப் பணிவோம்,ஆனால் நாமறியா மொழியில்நமக் கேது நாதம்? கீதமென்று புரியாத பாட்டைக் கேட்டுக் கிளர்ச்சிபெறா உணர்ச்சியிலே கீதம் ஏது? வாதமென்ன? இதிலெவர்க்கும் வருத்தம் ஏனோ? வாய்மணக்கப் பிறமொழியை வழங்கி னாலும் ஓதியதும் உணர்ந்ததுவும் தாய்ப்பா லோடும் ஊட்டியதாம் தாய்மொழிபோல் உதவா தொன்றும், 4 கலையென்றால் உணர்ச்சிகளைக் கவர வேண்டும்; களிப்பூட்டி அறிவினைப்போய் கவர வேண்டும்; நிலைகொள்ளார் சிந்தனையை நிற்கச் செய்து நீதிநெறி தெய்வத்தினைப் பூட்டற் கன்றோ? விலையில்லாப் பெருமைபல உடைய தேனும் விளங்காத பாஷையிலே பாட்டைக் கேட்டுத் தலையெல்லாம் சுளுக்கேற அசைத்திட் டாலும் தனக்கதுவோர் கலையின்பம் தருவ துண்டோ? 5 |