கம்பனென்ற பெரும்பெயரை நினைக்கும் போதே கவிதையென்ற கன்னிகைதான் வருவாள் அங்கே; அம்புவியில் கண்டறியா அழகினோடும் அமரருக்கும் தெரியாத அன்பி னோடும் இன்பமென்று சொல்லுகின்ற எல்லாம் ஏந்தி இன்னிசையும் நன்னயமும் இணைத்துக் காட்டித் துன்பமென்ற மனத்துயரைத் துடைத்து விட்டுத் தூங்காமல் தூங்குகின்ற சுகத்தை ஊட்டும். 5 37. கம்பனும் வான்மீகியும் கரையறியாக் காட்டாற்று வெள்ளம் போலக் கவிபொழிந்து வான்மீகி உலகுக் கீந்த திசையறியா ஓட்டத்தைத் தேக்கிக் கட்டித் திறமிகுந்த கால்வாய்கள் செய்து பாய்ச்சித் தரையறியா இலக்கியக்கா வணத்தைத் தந்தான் தனிப்புலமைக் கம்பனெனும் கவிதைத் தச்சன் உரையறியாப் பயனளிக்க உதவும் பாட்டை உலகமெலாம் அனுபவிக்க உழைப்போம் வாரீர்! 1 வானத்திலுள்ள மலர்வகைகள் எல்லாம் கொய்து வாசனைவேர் பச்சிலைகள், பலவும் சேர்த்துக் கனத்தஒரு பூப்பொதியாம் ராமன் காதை வான்மீகி யெனும் தவசி கட்டோ டீந்தான். இனத்தையெல்லாம் ஆய்ந்தறிந்தான் இணைத்துக் கோத்தான் இடைகிடந்த மாசுமறு யாவும் நீக்கித் தனித்தமணம் அறந்திகழும் மாலை யாக்கித் தரணிக்கே சூட்டிவைத்தான் கம்பன் தானே. 2 மால்கடிந்த தவமுனிவான் மீகி என்பான் வனத்திடையே தான்கண்டு கொண்டு வந்த பால்படிந்து, முள்ளடர்ந்து, பருத்து, நீண்டு பரிமளிக்கும் பலவின்கனி பாருக் கீந்தான் |