76நாமக்கல் கவிஞர் பாடல்கள்

அத்தகைய மாரபினுக்கிங் காக்கம் தந்தே
       அருணகிரி நாதனுடை அருளைத் தேக்கி
முத்திநெறி காட்டுகின்ற மோன ஞான
       முழுமதியாம் ரமணமகா முனிவன் ஜோதி       1

வெற்றியென்றும் வீரமென்றும் வெறிகள் மூட்டி
       வேற்றுமையே மக்களிடை விரியச் செய்து
கற்றுணர்ந்த பெரியவரைக் கசக்கப் பேசும்
       கசட்டறிவின் தலையெடுப்பைக் காணும் இந்நாள்
பற்றொழித்த மெய்ஞ்ஞானி இவரே யென்று
       பலகோடி பக்தர்மனம் பரவச் செய்த
நற்றவசி ரமணரிஷி வாழ்ந்த வாழ்வே
       நம்நாட்டின் பெரும்புகழின் ஜீவநாடி.       2

அணுவினுடன் அணுமோதி அழியச் செய்தே
       ஆருயிர்கள் பதைபதைக்க அவதி மூட்டப்
பணவெறியும் பார்வெறியும் பற்றித் தூண்டும்
       பாதகமே சாதனையாய்ப் படிக்கும் இந்நாள்
அணுவினுடன் அணுசேர அணைத்து நிற்கும்
       ஆண்டவனின் திருவருளை அறியச் செய்த
குணமலையாம் ரமணரிஷி மோன வாழ்வே
       கொடுமைகளை நம்மிடையே குறைக்கும் போதம்.       3

இன்றிருந்து நாளைக்குள் மறைந்து போகும்
       இச்சிறிய உடலினுக்குள் புகுந்து கொண்டு
நன்றிருந்து பேசுகின்ற ‘நான்யார்?‘ என்று
       நாளில்ஒரு தரமேனும் நாடிப் பார்த்தால்
‘என்றிருந்தோம்? எங்கு வந்தோம்? எதுநாம்‘ எல்லாம்
       எளிதாகக் கண்டுகொள்வாய் என்றே சொல்லிக்
குன்றிருந்த விளக்கேபோல் திசையைக் காட்டும்
       குறிக்கோளாம் ரமணமகா குருவின் வாழ்க்கை.       4

இந்திரியச் சுகங்களுக்கே ஓடி யாடி
       இழிவடைந்து துறவடைந்தோர் பலபே ருண்டு