சொல்லாலும் எழுத்தாலும் விளக்க வொண்ணாத் துன்பமெல்லாம் சிறைவாசம் அந்த நாளில்; வல்லாளர் சிதம்பரனார் சிறையிற் பட்ட வருத்தமெலாம் விரித்துரைத்தால் வாய்விட்டேங்கிக் கல்லான மனத்தவரும் கண்ணீர் கொட்டிக் கனல்பட்ட வெண்ணெயெனக் கரைவார் இன்றும். 2 சாதிகுலச் சமயமெலாம் கடந்த தக்கோர் சமரசமும் சன்மார்க்கம் தழுவும் சான்றோர் நீதிநெறி மிகப்பயின்ற பலபேர் சேர்ந்து நிறுவியநம் காங்கிரசை நிதமும் போற்றிப் பேதமுற்றுப் பிணங்கிவிட நேர்ந்த போதும் பெரியசபை அதைஇகழ்ந்து பேசா நேசன் ஓதிஅதன் வளர்ச்சியையே விரும்பி வாழ்த்தி உள்ளளவும்சிதம்பரந்தான் உவப்பான் உள்ளம். 3 பேசிவிட்டே சுயராஜ்யம் பெறலாம் என்று பெரியபல தீர்மானக் கோவை செய்து காசுபணம் பெருமையினால் தலைவ ராகிக் காங்கிரசை நடத்தியதைக் கண்டு நொந்து ‘தேசநலம் தியாகமின்றி வருமோ?‘ என்று திலகர்பிரான் செய்தபெருங் கிளர்ச்சி சேர்ந்தே ஓசைபடா துழைத்தசில பெரியோர் தம்முள் உண்மைமிக்க சிதம்பரனும் ஒருவ னாகும். 4 ‘உழுதுபல தொழில் செய்தே உழைப்போ ரெல்லாம் உணவும்உடை வீடின்றி உருகி வாடப் பழுதுமிக அன்னியர்க்குத் தரக ராகிப், பசப்புகின்ற வீணருக்கோ சுகங்கள்! என்றே அழுதுருகித் தொழிலாளர் இயக்கம் கண்டே அந்நாளில் சிதம்பரன்முன் நட்ட வித்தாம். விழுதுபல விட்டபெரு மரமாய் இன்று வெவ்வேறு கிளைகளுடன் விளங்கக் காண்போம். 5 |