புலவர் சிவ. கன்னியப்பன் 121

பேயுதித்துக் கொலுவிருக்கும் பெற்றி யேபோல்
       பிறர்நடுங்க அரசாண்டார் பலபேர் உண்டு;
போயுதித்த இடங்களெல்லாம் புதுமை பூட்டிப்
       புதையல்வந்து கிடைத்ததுபோல் பூரிப் பெய்தித்
தாயெதிர்த்த குழந்தைகள்போல் ஜனங்கள் பார்க்கத்
       தாவிவரும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.       6

ஏழைகளின் குடிமுழுக வரிகள் வாங்கி
       இந்திரியச் சொந்த சுகங்களுக்கே வீசிக்
கோழையராய்ப் பிறர்உழைப்பில் கோலங் கொள்ளும்
       கோமான்கள் குவலயத்தில் பலபேர் உண்டு;
வாழையைப்போல் பிறர்க்குதவி வருத்தம் தாங்கி
       வறியவர்க்கே கனிந்துருகும் வரிசைக் காக
வாழிஜவார் வாழிஜவார் வாழி யென்று
       வாழ்த்திசைக்கும் மன்னனெங்கள் ஜவஹர் லாலே.       7

64. ஜவஹர் நினைவு

நேருவை நினைத்தவுடன்
       நேர்மைக் குணம் என்னும்
மேருவை நிகர்த்தஒளி
       மின்னிவரும் முன்னால்
பாரிலுள்ள யாவரும்நம்
       பந்துஜன மென்றே
கோரும்ஒரு மெய்யுணர்வின்
       கொள்கைவரும் அன்றே?       1

ஜவஹரை நினைத்தவுடன்
       ஜாதிநிற பேதம்
அவனியில் அழித்தொழிய
       ஆர்வம்நம தாகும்.
நவநவ உணர்ச்சிகளின்
       நன்னெறியை ஊட்டும்
நல்லதுணை வல்லனென
       நம்மறிவு காட்டும்.       2