72. சுதந்தரச் சூரிய உதயம் பல்லவி சுதந்தரச் சூரியன் உதிக்கிற நேரம் தூங்காதே தமிழா! (சுதந்) அநுபல்லவி விதம்வித மாகிய புதுமணம் விரிந்திடும் விண்ணொளி தனிற்பல வண்ணங்கள் தெரிந்திடும். (சுதந்) சரணங்கள் அடிமை கொடுத்தஇருள் அகன்றிடப் போகுது ஆசைப்ப டிநடக்க வெளிச்சமும் ஆகுது கொடுமை விலங்கினங்கள் குகைகளுக் கோடிடும் கொஞ்சும் பறவைக்குலம் வானத்தில் பாடிடும். (சுதந்)1 ஒடுக்கும் தரித்திரத்தால் உடலும் குறுகிநின்று உள்ளவர் முன்னிருந்தே உளறும் எளியரைப்போல் நடுக்கும் குளிர்ப்பயமும் நம்மைவிட் டகன்றிடும் நாட்டினில் இச்சைப்படி நம்குடித் தனம்செய்வோம். (சுதந்)2 உரிமை சிறிதுமின்றி ஊரைப்ப றித்துஉண்டே உழைப்பின்றிச் சுகித்திடும் ஊனரைப் போல்இருட்டில் திரியும் திருடர்பயம் தீர்ந்திடும் நேரம்இனித் தீனரும் அச்சம்விட்டே ஆன சுகங்கள்பெறும். (சுதந்)3 குறிப்புரை:- சுகி - சுகானுபவம், தீனர் - இரப்போர், தீம்பர், இச்சை - விருப்பம். 73. சும்மா கிடைக்குமோ? பல்லவி சும்மா கிடைக்குமோ சுதந்தர சுகமது - மனமே! அநுபல்லவி சுத்தமும் பக்தியும் சத்தியம் இல்லாமல் சூரமும் வீரமும் சொல்லுவ தால்மட்டும் (சும்மா) |