16நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சூட்டாத நாமம் இல்லை
       தோன்றாத உருவமில்லை
அல்லாவாய்ப் புத்த னாகி
       அரனரி பிரம்ம னாகி
அருளுடைச் சமணர் தேவும்
       அன்புள்ள கிறித்து வாகிக்
கல்லாத மனத்திற் கூடக்
       காணாமல் இருப்பா ரந்தக்
கடவுள்என் நுலகம் போற்றும்
       கருணையைக் கருத்தில் வைப்பாம்.

3. இறைவன்

அன்பினுக் கன்பாய் வந்தும்
       அறிவினுக் கறிவாய் நின்றும்
அறிந்தவர்க் கெளிய னாகி
       அல்லவர்க் கரிய னாகி
முன்பினும் நடுவொன் றின்றி
       முதுமறை தனக்கு மெட்டான்
மூடர்கள் மனத்திற் கூட
       மூலையில் ஒதுங்கி நின்று
செம்பினும் கல்லி னாலும்
       செய்தவை எல்லா மாகிச்
சிலந்திபோற் கூடு கட்டிச்
       சிலுவையில் மறைத்தான் போல
என்பினுக் கென்பா யென்றும்
       எம்முனே விளங்கு கின்ற
எழுசுடர் சோதி யான
       இறைவனை இறைஞ்சி நிற்பாம்.

4. சக்திதனைத் தொழுதிடுவோம்

இல்லையென்று சொல்வதற்கும்
       இருக்கின்ற ஒரு பொருளாய்