232நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கட்சிச் சண்டைகள் பட்டாரைக்
       கட்டுக் கட்டாய்ச் சுட்டேபின்
பட்சம் வந்த மனத்துடனே
       பழகுவம் எல்லாம் இனத்துடனும்.       4

ஒவ்வொரு வீட்டிலும் பலகாரம்;
       ஒருவருக் கொருவர் உபகாரம்;
இவ்வித வாழ்வே தினந்தோறும்
       இருந்திட வேண்டிநம் மனம்கோரும்       5

ஈயாப் பத்தரும் ஈந்திடும்நாள்
       ஏகிடும் அடிமையும் ஓய்ந்திடும்நாள்
நோயால் நொந்தே இளைத்துவரும்
       நோன்பெனக் கொஞ்சம் செழித்திடுவார்.       6

‘ஐயா பசி‘யென் பாரில்லை
       ‘அப்புறம் வா‘யென் பாரில்லை
மெய்யே அன்பு மிகுந்திடும் நாள்
       வேற்றுமை விட்டு மகிழ்ந்திடும் நாள்.       7

மாச்சரி யங்களும் மறைந்திடும்நாள்
       மனிதன் இயல்பு சிறந்திடும்நாள்
ஆச்சரி யம்போல் எல்லோரும்
       ஆடலும் பாடலும் சல்லாபம்.       8

172. சுதந்தரத் திருநாள்

இந்திய நாட்டின் சுதந்தரத் திருநாள்
       இன்பம் யாவையும் இனிமேல் தரும்நாள்;
செந்தமிழ்த் தாயின் திருப்புகழ் பாடித்
       தெய்வம் தொழுவோம் யாவரும்கூடி.       1

அன்னிய ஆசைகள் அனைத்தையும் ஒழித்தோம்;
       ‘அடிமை‘ என்னும் சொல்லையும் அழித்தோம்;
பொன்னையும் சுகத்தையும் செலவழித் தேனும்
       பூரண சுதந்தரம் அடைந்திட வேணும்.       2