புலவர் சிவ. கன்னியப்பன் 231

புத்தம் புதியஉடை தரித்தே - எழில்
       பொங்கும் மலர்மணங்கள் விரித்தே
சித்தம் வியக்கஒளி வீசிப் - பல
       சின்னஞ் சிறுகதைகள் பேசி
மெத்தப் படித்தவரும் கேட்டுப் - பயன்
       மேவும் மெய்யறிவு கூட்டும்
தித்திக்கும் கீதங்கள் பாடி - வந்த
       தெய்வக் கண்ணனிடம் ஓடி.       3

கண்ணன் அறிவுரைகள் கேட்போம் - ஒருக்
       காலும் சோர்ந்திருக்க மாட்டோம்
பண்ணும் எந்தஒரு செயலும் - சுய
       பாசம் அற்றிருக்க முயலும்
எண்ணம் மிகத்தெளிவு கொண்டோம் - அவன்
       என்றும் பணிபுரியக் கண்டோம்
திண்ணம் கண்ணனுடை உறவால் - நாம்
       தீரச் சிறப்புகளைப் பெறுவோம்.       4

171. தீபாவளி எனும் திருநாள்

தீபாவளிஎனும் திருநாளே
       தெய்வம் அன்பென வருநாளாம்
கோபா வளிகளைக் கொளுத்திடும்நாள்.
       கொஞ்சிக் குலவிக் களித்திடும்நாள்.       1

தனித்தனி வீட்டின் தரைமெழுகி,
       தரித்திரப் பீடையைத் தலைமுழுகி,
மனத்துயர் யாவையும் மறந்திடுவோம்;
       மகிழ்வுடன் உள்ளதை விருந்திடுவோம்.       2

உதவாப் பழசாம் வழக்கமெல்லாம்
       உதறித் தள்ளுதல் ஒழுக்கமெனப்
புதிதாம் ஆடைகள் புனைந்திடுவோம்.
       புதுப்புது வழிகளில் நினைந்திடுவோம்.       3