302நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பாழுங் கள்ளால் பட்டதை நினைந்தால்
       பதைக்குது நெஞ்சம் கொதிக்குதடா!
வாழும் நாடுஇனி; ஏழை கள்இல்லை;
       வானவர் வணங்கிட வாழ்ந்திடுவோம்!       (விட்)12

189. எது வேண்டும்?

எது உனக்கு வேண்டு மென்று
       எண்ணிப் பார்த்துச் சொல்லடா!
மதிமி குந்த மனித ஜன்ம
       மகிமை காத்து நில்லடா!       1

ஞானமுள்ள நாடுஇது என்று
       பேர்நி லைத்தல் வேண்டுமா?
சேனை கொண்டு சென்றுகொன்று
       சீர்கு லைத்தல் வேண்டுமா?       2

தந்தி ரத்தை வெல்லும்தூய்மை
       தாங்கி நிற்க வேண்டுமா?
எந்திரத்தின் அடிமையாகி
       ஏங்கி நிற்க வேண்டுமா?       3

அறிவு கொண்டு மக்களுக்கே
       அன்பு செய்தல் வேண்டுமா?
செறிவு கொண்ட சக்திபெற்றுச்
       சேதம் செய்தல் வேண்டுமா?       4

வெள்ளை யாகத் தீமையை
       எதிர்த்து வெல்ல வேண்டுமா?
கள்ளமாய் மறைந்து செய்யும்
       காரி யங்கள் வேண்டுமா?       5

அன்பு சொல்லித் தீமையை
       அடக்கி யாள வேண்டுமா?
வன்பு பேசித் தீமையை
       வளர்த்து வைக்க வேண்டுமா?       6