232. சத்தியச் சங்கூதுவோம் ‘சத்தியம் நிலைக்கும்‘ என்று சங்கூதுவோம்! ‘சாந்தமே ஜெயிக்கும்‘ என்று சங்கூதுவோம்! ‘நித்தியம் கடவுள்‘ என்று சங்கூதுவோம்! ‘நீர்க்குமிழாம் வாழ்க்கை‘ என்று சங்கூதுவோம்! 1 ‘நீதியே நிலைக்கும்‘ என்று சங்கூதுவோம்! ‘நியாயமே கெலிக்கும்‘ என்று சங்கூதுவோம்! ‘வாதுசூது பொய்மையாவும் ஒன்றோ டொன்றாய் வம்புகொண்டு மறையும்‘ என்று சங்கூதுவோம்! 2 ‘புண்ணியம் பலிக்கும்‘ என்று சங்கூதுவோம்! ‘பொறுமையே கெலிக்கும்‘ என்று சங்கூதுவோம்! ‘மண்ணிற்செய்த நன்மைதீமை அல்லாமலே மற்றதொன்றும் மிச்சமில்லை‘ என்றுஊதுவோம்! 3 ‘தருமமே நிலைக்கும்‘ என்று சங்கூதுவோம்! ‘தானமே தழைக்கும்‘ என்று சங்கூதுவோம்! ‘கருமமே சிறக்கும்‘ என்று சங்கூதுவோம்! ‘கடவுளுண்மை வடிவம்‘ என்று சங்கூதுவோம்! 4 ‘உண்மையைக் கடைப்பிடித்து உயர்ந்தவர்களை உலகமோசம் என்ன செய்யும்‘ என்றூதுவோம்! ‘தண்மையான சாந்திபெற்ற தக்கோர் முன்னே சஞ்சலங்கள் ஓடும்‘ என்று சங்கூதுவோம்! 5 ‘கோபமற்றுக் குணமிகுந்த நல்லோர் முன்னால் கூர்மழுங்கும் ஆயுதங்கள்‘என் றூதுவோம்! ‘பாபமற்ற வாழ்க்கையுள்ள பண்பாளரைப் பயமுறுத்த ஒன்றுமில்லை‘ என்றூதுவோம்! 6 ‘அன்புகொண்டு ஆசையற்ற நல்லார்களை அரசனும் வணங்கும்‘ என்று சங்கூதுவோம்! ‘வன்புதுன்பம் வஞ்சமாயம் எல்லாம்இதோ வழிகொடுத்து விலகும்‘ என்று சங்கூதுவோம்! 7 |