பொருள்பெற யாரையும் புகழாது; போற்றா தாரையும் இகழாது. 3 அன்பும் அறமும் ஊக்கிவிடும்; அச்சம் என்பதைப் போக்கிவிடும்; இன்பம் பொழிகிற வானொலியாம்; எங்கள் தமிழெனும் தேன்மொழியே. 4 குற்றம் கடிந்திடக் கூடாது; கொச்சை மொழிகளில் ஏசாது; முற்றும் பரிவுடன் மொழிகூட்டி முன்னோர் நன்னெறி வழிகாட்டும். 5 தமிழின் பெருமையை மறந்துவிடின் தாரணி மதிப்பில் குறைந்திடுவோம்; தமிழன் குரலொடு ஆர்த்திடுவோம்; தமிழக உரிமையைக் காத்திடுவோம். 6 22. தமிழகம் வாழ்க தமிழா! உனக்கிது தருணம் வாய்த்தது தரணிக் கெல்லாம் வழிகாட்ட அமுதாம் என்மொழி; அறமே என்வழி; அன்பே உயிர்நிலை என்று சொல்லும் (தமிழா)1 சைவமும் வைணமும் சமணமும் பவுத்தமும் தழைத்தது செழித்தது தமிழ்நாட்டில் வையகம் முழுவதும் வணங்கிடும் குணங்களை வாழ்ந்தவர் உன்னுடை முன்னோர்கள் (தமிழா)2 எங்கோ பிறந்தவர் புத்தர் பெருமையை ஏத்திப் பணிந்தவர் தமிழ்நாட்டார்; இங்கே அங்கே என்ற வுரைகளை என்றும் பிரிந்திலர் தமிழ்நாட்டார். (தமிழா)3 |