426நாமக்கல் கவிஞர் பாடல்கள்

261.காந்தி சொல்லை ஏந்தி நிற்போம்

அடிமைத்தனத்தை விட்டோம் - ஆனால்
       அன்பை மறந்து கெட்டோம்
மடமைத் தனத்தை வென்றோம் - ஆனால்
       மமதை நிறைந்து நின்றோம்
கொடுமை எதிர்த்து வந்தோம் - இன்று
       கொள்கை உதிர்ந்து நொந்தோம்
உடைமை அடையப் பெற்றோம் - ஆனால்
       உண்மைப் பிடிகள் அற்றோம்.       1

பதவியைஏசி வந்தோம் - இன்று
       பதவிக்கே ஆசை தந்தோம்
உதவிகள் தேடிச் செய்தோம் - இந்நாள்
       உதவியை நாடி வைதோம்
மதவெறி தீமை என்றோம் - நாமும்
       மாறிப் பொறாமை கொண்டோம்
இதுவும் சுதந்தரந் தானோ? - இனி
       என்ன இதந் தருமோதான்?       2

ஒற்றுமைவேண்டும் என்றோம் - இந்நாள்
       உறவறத் தூண்டு கின்றோம்
வெற்றுரை விட்டு உழைத்தோம் - இன்று
       வேற்றுமைப் பட்டு இளைத்தோம்
பெற்றசு தந்திரத்தை - நாம்
       பேணி இதம் பெறத்தான்
நற்றவன் காந்தி சொல்லே - எந்த
       நாளிலும் ஏந்தி நிற்போம்.       3

குறி்ப்புரை:-மமதை - எனது என்கின்ற செருக்கு.

262.காந்தீயமே உலகைக் காக்கும்

ஜயஜயகாந்தியின் திருப்புகழ் பாடு
       சகத்தினுக்(கு) அரும்பணி வேறிலை ஈடு