புலவர் சிவ. கன்னியப்பன் 97

கொலைமேவும் போர்வழியை இகழ்ந்து கூறிக்
       கொல்லாமை பொய்யாமை இரண்டும் சேர்ந்த
கலைவாணர் மெய்த்தொண்டர் கருதிப் போற்றும்
       காந்திஎம்மான் அருள்நெறியைக் கனிந்து வாழ்த்தும்
நிலையான பஞ்சகத்தைப் பாடித் தந்து
       நித்தம்நித்தம் சன்மார்க்க நினைப்பைக் கூட்டும்
தலையாய தமிழறிவை நமக்குத் தந்த
       தவப்புதல்வன் பாரதிஓர் ஆசான் தானே!       7

தமிழரென்ற தனிப்பெயரைத் தாங்கி னாலும்
       தனிமுறையில் அரசாளத் தலைப்பட் டாலும்
இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்
       இந்தியத்தாய் சொந்தத்தில் இடைய றாமல்
அமைதிதரும் ஒற்றுமையை அழுத்திச் சொல்லி
       அன்புமுறை தவறாத அறிவை ஊட்டி
அமிழ்தமொழி தமிழினத்தின் ஆக்கம் காக்கும்
       ஆற்றல்தரும் பாரதிஓர் ஆசான் என்றும்.       8

குறிப்புரை:-முத்தி இன்பம் - பேரின்பம்; சரிநிகர் - சமம்;
பாவையர் - பெண்கள்; சுகித்து - அனுபவித்து; ஊதாரி - வீண்
செலவுக்காரன்.

52. பாரதிக்கு வெற்றி மாலை

சுப்பிரமணிய பாரதிக்கு வெற்றிமாலை சூட்டுவோம்
சொன்னவாக்குப் பின்னமின்றிச் சொந்தஆட்சி நாட்டினோம்
இப்ரபஞ்ச மக்கள்யாரும் இனியவாழ்த்துக் கூறவே
இன்றுநந்தம் பரததேவி ஏற்றபீடம் ஏறினாள்.       1

சுத்தவீர தீரவாழ்வு சொல்லித்தந்த நாவலன்
சூதுவாது பேதவாழ்வு தொலையப்பாடும் பாவலன்
சக்திநாடிப் புத்திசெல்லச் சாலைகண்ட சாரதி
சத்தியத்தில் பற்றுக்கொண்ட சுப்ரமண்ய பாரதி.       2

4 நா.க.பா.பூ.வெ. எ. 489