98நாமக்கல் கவிஞர் பாடல்கள்

ஆடுமாடு போலவாழ்வு அடிமைவாழ்வு என்பதை
அரிவரிக்கு வழியிலாத அனைவருக்கும் தென்படப்
பாடிநாடு வீடுதோறும் வீறுகொள்ளப் பண்ணினான்
பாரதிக்கு வேறொருத்தர் நேருரைக்க ஒண்ணுமோ?       3

அஞ்சிஅஞ்சி உடல்வளர்க்கும் அடிமைப்புத்தி நீக்கினான்.
அன்புமிஞ்சும் ஆண்மைவாழ்வில் ஆசைகொள்ள ஊக்கினான்
கெஞ்சிக்கெஞ்சி உரிமைகேட்கும் கீழ்மை எண்ணம் மாற்றினான்
கேடிலாது மோடிசெய்யும் காந்தி மார்க்கம் போற்றினான்.       4

அமைதிமிக்க தமிழ்மொழிக்கிங் காற்றல்கூட்ட நாடினான்
அறிவுமிக்க தமிழர்தங்கள் அச்சம்போக்கப் பாடினான்
சமதைகண்டு மனிதருக்குள் ஜாதித்தாழ்வை ஏசினான்
சமயபேதம் இல்லையென்ற சத்தியத்தைப் பேசினான்.       5

குறிப்புரை:-சமயபேதம் - சமய வேறுபாடு; வீறு - வெற்றி,
பெருமை;ப்ரபஞ்சம் - இவ்வுலகம்.

53. பாரதி நினைவு

சுப்ரமண்ய பாரதியை நினைந்திட் டாலும்
       சுதந்தரத்தின் ஆவேசம் சுருக்கென் றேறும்;
இப்ரபஞ்சம் முழுதும்நமக் கினமாய் எண்ணும்;
       ‘இந்தியன்நான்‘ என்றிடும்நல் லிறுமாப் புண்டாம்;
எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும்;
       எல்லையற்ற உற்சாகம் எழுந்து பொங்கும்
ஒப்பரிய ‘தமிழன்‘ எனும் உவகை ஊறும்;
       உள்ளமெல்லாம் துள்ளியெழும் ஊக்கம் உண்டாம்.       1

அச்சமெனும் பெரும்பேயை அடித்துப் போக்கும்;
       அடிமைமன விலங்குகளை அறுத்துத் தள்ளும்;
துச்சமென வருதுயரம் எதையும் தாங்கிச்
       சுதந்தரத்தை விட்டுவிடாத் துணிவு தோன்றும்;