நியாய வாதிகளும்; நல்லவர்களும் முறைமாறிய சரிசமமற்ற பலத்தோடு நிரந்தரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்களென்றே தோன்றியது. சிந்தாதிரிப்பேட்டை அங்கப்பனின் ஓவியக் கூடத்திற்கு எல்லோருமாகப் போய்ப் பார்த்து ‘ஸீன்கள்’ தேர்ந்தெடுத்து விட்டு வந்த தினத்திற்குப் பின் ஓர் இரண்டு வாரங்கள் கோபாலோடு நெருக்கமாகவோ, அடிக்கடி சந்தித்துப் பழகவோ வாய்ப்பின்றிப் போகும்படி தானாகவே ஒரு வசதி நேர்ந்தது முத்துக்குமரனுக்கு. அடுத்த நாளே, ஏதோ ஒரு படத்தின் வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்பிற்காகக் கோபால் விமானம் மூலம் குழுவினருடன் காஷ்மீருக்குப் புறப்பட்டு விட்டான். தான் திரும்ப இரண்டு வாரமாகுமென்றும் - அதற்குள் நாடகத்தை எழுதி முடித்து ரிஹர்ஸலைத் தொடங்குவதற்கு ஏற்ற முறையில் வைத்திருக்க வேண்டுமென்றும் முத்துக்குமரனிடமும், மாதவியிடமும் கோபால் திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டுப் போயிருந்தான். அதனால் முத்துக்குமரன் கடற்கரைக்கோ, வேறு வெளியிடங்களுக்கோ செல்வதைக் குறைத்துக் கொண்டு நாடகத்தை தீவிரமாக எழுதி முடிப்பதில் ஈடுபட்டான். மாதவியும் அவன் எழுதிய கையெழுத்துப் பிரதியை டைப் செய்வதில் தீவிரமாகக் கவனம் செலுத்தினாள். அந்த வேகமான நாட்களில் முத்துக்குமரன் இரவிலும் கண்விழித்து எழுதினான். இரவில் அவன் எழுதிக் குவித்தவற்றையும் சேர்த்துப் பகலில் பிரதி எடுக்க வேண்டிய கடுமையான வேலை மாதவியின் தலையில் சுமந்தது. இதனால் ஒரு பத்துப் பன்னிரண்டு நாட்கள் எப்படி கழிந்தனவென்றே தெரியாமல் வேகத்தில் போய்விட்டது. கோபால் வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்பிற்காகக் காஷ்மீர் புறப்பட்டுச் சென்ற பன்னிரண்டாவது நாள் அவனிடமிருந்து, ‘நாடகம் எந்த நிலையில் இருக்கிற |