தென்று விசாரித்து முத்துக்குமரனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் தன் கைக்குக் கிடைத்த சமயத்தில் முத்துக்குமரன் நாடகத்தின் கடைசிக் காட்சியில் எல்லாருமாகச் சேர்ந்து பாட வேண்டிய பாடலையும் எழுதிக் கொண்டிருந்தான். அடுத்த நாள் காலையில் முத்துக்குமரன் வரையில் நாடகம் எழுதப் பெற்று முடிந்துவிட்டது. மாதவி தான் டைப் செய்து முடிக்க வேண்டியிருந்தது, அவளும் காலையிலிருந்து நண்பகல் வரை டைப் செய்வதற்கான வேலைதான் மீதமிருந்தது. அவள் காலையில் டைப் செய்ய வந்தபோது ‘ஹேர் கட்டிங்குக்காக’ முத்துக்குமரன் ஸலூனுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். சென்னை வந்ததிலிருந்து முடிவெட்டிக் கொள்ளாததாலும். அதற்கு முந்தியும் ஒரு மாத காலமாக முடி வளர்ந்து காடாகியிருந்ததாலும் அவன் அன்று கண்டிப்பாக அந்தக் காரியத்தை முடித்துக்கொண்டு வந்து விடுவதென்று கிளம்பியிருந்தான். போகும்போது, ‘‘நான் திரும்பி வருகிறவரை டைப் செய்யப்போதுமான வேலை உனக்கு இருக்கிறது. நீ டைப் செய்து முடிப்பதற்குள் நான் ஸலூனிலிருந்து அநேகமாகத் திரும்பி வந்துவிடுவேன்’’ என்று மாதவியிடம் அவன் சொல்லிவிட்டுத்தான் போனான். கோபாலின் டிரைவர் பாண்டி பஜாரில் ஓர் ஏர்க்கண்டிஷன் செய்த நவநாகரிக ஸலூனின் முன்னால் கொண்டுபோய் முத்துக்குமரனை இறக்கிவிட்டான். முத்துக்குமரன் உள்ளே நுழைந்ததுமே - முன் பகுதியில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது அந்தக் காத்திருக்கும் இடத்தில் தமிழ்த் தினசரிகள், வார, மாத சினிமா இதழ்கள், ஆங்கில இதழ்கள் எல்லாமாக ஒரு குட்டி லைப்ரரியே இருந்தது. மேலே சுவரின் நாற்புறமும் குளிக்கிற பெண்களின் காலண்டர்களும் - குளிக்காவிட்டாலும் - குளிப்பதைவிடக் குறைவாக உடையணிந்த பெண்களின் ஓவியங்களும் மாட்டப்பட்டிருந்தன. ஒரே சமயத்தில் உலகத்திலுள்ள அத்தனை பெண்களும் குளித்துக் கொண் |