கடுமையாகத் திட்ட வேண்டுமென்று கோபம் வந்து கூடப் பொறுமையாகப் போய்விட முயன்றான் அவன். அன்று பகல் இரண்டு மணிக்கு முன்பே தனக்கு வேறு ‘‘கால் ஷீட்’’ இருப்பதாகக் கூறி கோபால் புறப்பட்டுப் போய் விட்டான். மாதவி மட்டும் இருந்தாள். அவள் அவனைக் கடிந்து கூறினாள். ‘‘உங்களுக்கு ஏன் இந்த வம்பெல்லாம்? நாடகத்தை எழுதிக் கொடுத்தால் அவர்கள் இஷ்டப்படி, போட்டுக் கொண்டு போகிறார்கள்?’’ ‘‘நாடகத்தை எழுதியிருப்பவன் நான் என்பதை நானே அத்தனை சுலபமாக மறந்துவிட முடியுமா என்ன?’’ ‘‘மறந்திட சொல்லலை, ஓரேயடியா மன்றாடுவானேன்?’’ ‘‘அப்படியில்லே, பிடிவாதத்தினாலேதான் சில நல்லதையாவது இந்த நாளிலே காப்பாத்திக்க முடியுது.’’ ‘‘நல்லதைக் காப்பாத்த யார் ஆசைப்படறாங்க? பணத்தைக் காப்பாத்திக்கத்தான் இப்ப எல்லாருமே ஆசைப்படறாங்க.’’ ‘‘நீ ரெண்டாவதாகச் சொன்னது கோபாலுக்குப் பொருத்தம்தான்! அது சரி. சாயங்காலம் மத்தவங்களுக்கு ரிஹர்சல்னு சொல்லிட்டுப் போனானே; மத்தவங்க யாராரு? எப்ப வருவாங்க? எப்பிடி வருவாங்க? ஒண்ணுமே தெரியலியே?’’ ‘‘சொல்லியனுப்பிச்சிருப்பாரு. ‘வேன்’ போய்க் கூட்டிக்கிட்டு வரும். நாடகங்களிலே ஸைட் ரோல் நடிப்புக்குன்னே பல குடும்பங்கள் இங்கே கஷ்ட ஜீவனம் நடத்தது. ஆளுக்கென்ன பஞ்சம்?’’ ச - 8 |