‘‘அது சரி? ஆனா பஞ்சத்துக்கு வந்த ஆளுங்கள்ளாம் கலையுணர்ச்சியைக் காப்பாத்திட முடியாதே?’’ ‘‘கலையைக் காப்பத்தறதுக்காக யாருமே பட்டணத்துக்கு வர மாட்டாங்க. வயித்தைக் காப்பாத்திக்கிறதுக்காகத்தான் வருவாங்க...வந்திருக்காங்க.’’ ‘‘அதுதான் பட்டணத்துலே ‘‘கலை’ங்கள்ளாம் இப்படி இருக்குப் போலிருக்கு.’’ இதற்கு மாதவி பதில் சொல்லவில்லை. சிறிது நேரத்தில அவள் கூறியது போலவே ஒரு ‘வேன்’ நிறைய ஆண்களும் பெண்களுமாகப் பத்துப் பதினைந்து பேர் வந்து இறங்கினார்கள். ஏதோ களையெடுக்க வந்தவர்கள் மாதிரிக் கூப்பாட்டுடன் வந்தவர்கள் ‘வேன்’ அருகே வந்த முத்துக்குமரனையும் மாதவியையும் பார்த்ததும் அவர்களாகவே அடங்கிக் கட்டுப்பட்டு நின்றனர். அவர்களை அவுட் ஹவுஸ் வராந்தாவுக்கு அழைத்துப் போய் யார் யாருக்கு எந்தப் பாத்திரம் தரலாம் என்று தீர்மானம் செய்ய அரைமணி நேரத்துக்கு மேலாயிற்று. ‘‘எமது மாமன்னரின் வாளைச் சுழற்றினால் இப்பூமண்டலமே சுழலுமென்பதை நீ அறிய வேண்டும்?’’ என்ற வசனத்தைப் படைத் தூதன் வேடமிட இருந்த ஒர் இளைஞனைப் படிக்கச் சொல்லிக் கேட்டான் முத்துக்குமரன். ‘‘எமது மாமன்னரின் வாலைச் சுலற்றினால் இப்பூமண்டலமே சுளலும்’’ என்று படித்த அந்த இளைஞனை நோக்கி, ‘‘ஏன்? உமது மாமன்னரின் வால் அத்தனை நீளமோ?’’ என்று முத்துக்குமரன் கிண்டல் செய்து பதிலுக்குக் கேட்டபோது அந்தக் கிண்டல் கூடப் புரியாமல் மருண்டு நின்றான் அந்த இளைஞன். ‘‘கிரகசாரமே’’ என்று தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர முத்துக்குமரனால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அவர்களில் பலர் தெளிவாக வசனங்களை உச்சரித்துப் பேசுவதற்கோ |