| அப்போது வெளிவருவது பொருத்தமாயிருக்கும் என்று கோபால் வேறு சிபாரிசுக்கு வந்தான். ஆனால் ‘ஜில் ஜில்’ கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் முத்துக்குமரன் இடக்காகவே பதில் கூறினான். எவ்வளவோ முயன்றும் ‘ஜில் ஜில்’ முத்துக்குமரனிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்க முடியவில்லை. முத்துக்குமரன் ‘ஜில் ஜில்’லை மிகவும் அலட்சியமாகவும் அநாயாசமாகவுமே எதிர் கொண்டான். ‘‘நான் எத்தினியோ பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் பேட்டி கண்டிருக்கேன். தியாகராஜ பாகவதரு, பி. யு. சின்னப்பா - டி. ஆர். ராஜகுமாரி - எல்லாரையுமே எனக்கு நல்லாத் தெரியும்...’’ ‘‘நான் அத்தனை பெரியவன் இல்லே.’’ ‘‘எங்க ‘ஜில் ஜில்’லிலே ஒரு பேட்டி வந்திட்டா அப்புறம் தானே பெரிய ஆளாயிடறீங்க.’’ ‘‘அப்ப பெரிய ஆளுங்களைத் தயார் பண்ற காரியத்தை ரொம்ப நாளாக செஞ்சுகிட்டிருக்கீங்கன்னு சொல்லுங்க...’’ ‘‘நம்ம ‘ஜில் ஜில்’ பத்திரிக்கைக்கே அப்படி ஒரு ராசி உண்டுங்க.’’ ‘‘அப்படியா? இருக்காதா பின்னே?’’ ‘‘சரி! எதையோ பேசிக்கிட்டிருக்கோமே? நம்ம பேட்டியைக் கவனிக்கலாமா இப்ப?’’ ‘‘பேஷாக் கவனிக்கலாமே! என்ன வேணும்? சொல்லுங்க?’’ ‘‘உங்க கலையுலக வாழ்க்கையை எப்பத் தொடங்கினீங்க?’’ ‘‘கலையுலகம்னா என்னான்னு முதல்லே சொல்லுங்க. அப்புறம் நான் பதில் சொல்லுகிறேன். எனக்குத் |