| -இப்படி முத்துக்குமரனும் ஜில் ஜில்லும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே மாதவி அந்தப் பக்கமாக வந்து நின்றாள். ‘‘அம்மா வரப்பவே தென்றல் வீசுதே’’ - என்று ஜில் ஜில் பல்லை இளித்தான். முகத்தில் புண்திறந்து மூடியது போன்ற அவனுடைய மாமிசப் புன்னகை முத்துக்குமரனுக்கு அருவருப்பை அளித்தது. ‘‘சரி, இப்ப அடுத்த கேள்விக்கு வர்ரேன். நீங்க ஏன் இன்னும் கலியாணம் செய்துக்கலை?’’ ‘‘ஓர் ஆண் பிள்ளையைப் பார்த்துக் கேட்கப்படுகிற இப்படிப்பட்ட கேள்வியினால் உங்கள் வாசகர்களை நீங்கள் எந்த விதத்திலும் கவரமுடியாது, மிஸ்டர் ஜில் ஜில்.’’ ‘‘பரவாயில்லை! நீங்க சொல்லுங்க.’’ ‘‘சொல்லத்தான் வேணுமா?’’ ‘‘சும்மா சொல்லுங்க சார்!’’ ‘‘இவளைப் போல (மாதவியைச் சுட்டிக் காட்டி) ஒரு தென்றல் வீசினால் கட்டிக்கிடலாம்னு பார்க்கிறேன்’’- ‘‘அப்படியே எழுதிக்கிடட்டுமா சார்?’’ ‘‘அப்படியே என்றால் எப்படி?’’ ‘‘மாதவியைப் போல் மங்கை நல்லாள் கிடைத்தால் மணப்பேன் - வசனகர்த்தா முத்துக்குமரனின் சபதம்னு எழுதிக்கிறேன்.’’ ‘‘இது ஆசைதான்! ஆசை வேறே, சபதம் வேறே, சபதம்னு இதைச் சொல்றது தப்பு.’’ ‘‘பத்திரிகை நடைமுறையிலே நாங்க அப்படித்தான் சொல்லுவோம்...’’ ‘‘உங்க பத்திரிகை நடைமுறையைக் கொண்டுபோய் உடைப்பிலே போடுங்க...’’ |