| அடுத்தவங்க மனசைச் சங்கடப்படுத்தறதிலே என்ன பிரயோசனம்?’’ ‘‘நீ எனக்குப் புத்திமதி சொல்லிக் கொடுக்கிறியாக்கும்...’’ ‘‘சே! சே! அப்படியொண்ணுமில்லை. அந்த மாதிரி நினைச்சீங்கன்னா நான் ரொம்ப வருத்தப்படுவேன்.’’ ‘‘வருத்தப்படேன். அதனாலே என்ன?’’ என்னை வருத்தப்படச் செய்யறதிலே உங்களுக்கு என்ன அத்தினி சந்தோஷம்!’’ ‘‘பேச்சை வளத்தாதே, எனக்குத் தூக்கம் வருது...’’ ‘‘நான் பேசத் தொடங்கினாலே தூக்கம் வந்துவிடும் போலிருக்கு.’’ ‘‘காலையில் இந்தப் பக்கம் வாயேன்.’’ ‘‘சரி! வரேன்...’’ -அவன் ஃபோனை வைத்தான். முதல் நாள் ஸ்டேஜ் ரிஹர்ஸலின்போது வேறு தூக்கம் விழித்திருந்த காரணத்தினால் முத்துக்குமரனுக்குத் தூக்கம் கண்ணைச் சொருகியது. நன்றாகத் தூங்கிவிட்டான். சொப்பனம் கூடக் குறுக்கிட முடியாதபடி அத்தனை அயர்ந்த தூக்கம். காலையில் எழுந்ததுமே கோபாலின் முகத்தில் தான் அவன் விழிக்க நேர்ந்தது, முதல் நாள் ஒன்றுமே நடைபெறாதது போல் சுபாவமாகச் சிரித்துக் கொண்டே வந்தான் கோபால். ‘‘காலையில் எழுந்திருக்கிறதுக்குள்ளாகவே அஞ்சாறு சபா செகரெட்ரீஸ் ஃபோன் பண்ணிட்டாங்க, நம்ம நாடகத்துக்கு அதுக்குள்ளேயே ஏகப்பட்ட ‘டிமாண்ட்’ வந்திருக்கு.’’ ‘‘அப்படியா?’’ - என்பதற்கு மேல் முத்துக்குமரன் அதிகமாக எதுவும் பதில் சொல்லவில்லை. தன்னைக் |