| டாக்ஸிக்காரன் அதை வாங்கிப் படித்துவிட்டு ‘‘போக்ரோடுன்னு சொல்லுங்க சார். மழையில் நனைஞ்சு ‘க்’ கன்னாவிலே மேல் புள்ளி போயிருக்கு’’ என்று - முகமலர்ந்து சிரித்துக் கொண்டே தாளைத் பதிலுக்குச் சிரித்துக் கொண்டே அதைத் திருப்பி வாங்கிப் பார்த்தபோது ‘போக்’ என்பதில் மேல் புள்ளி அழிந்து ‘போக’ என்றாகியிருப்பது தெரிந்தது. கோபால் குடியிருக்கும் ரோடு ‘போக’ ரோடு ஆகத்தான் இருக்க வேண்டுமென்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. மீண்டும் தனக்குத் தானே ஒருமுறை அவன் சிரித்துக் கொண்டான். டாக்ஸி விரைந்தது. ‘‘நடிகர் கோபாலை உங்களுக்குத் தெரியுங்களா...?’, என்று நடுவே ஆவலோடு ஒரு கேள்வி கேட்டான் டாக்ஸிக்காரன். ‘தெரியும்’ என்று ஒரு வார்த்தையில் பதிலை முடிக்கத் தெரியாமல் - பாய்ஸ் கம்பெனியில் தானும் கோபாலும் சேர்ந்ததிலிருந்து தொடங்கிக் கோபால் சென்னை வந்து சினிமா உலகில் ஐக்கியமானது வரை விவரிக்கத் தொடங்கி விட்டான் முத்துக்குமரன். ‘இந்த ஆள் வெளியூர் மட்டுமில்லை; நாட்டுப்புறமும்கூட’ - என்பதை அந்த விரிவான பதிலிலிருந்தே டாக்ஸி டிரைவர் அநுமானித்துக் கொள்ள முடிந்தது. அழகிய பெரிய தோட்டத்துக்கு நடுவிலிருந்த கோபாலின் பங்களாவின் முகப்பை டாக்ஸி அடைந்த போது ‘கேட்’டிலேயே கூர்க்கா டாக்ஸியைத் தடுத்து நிறுத்தி விட்டான். கூர்க்காவிடம் என்ன சொல்லி மழையில் நனையாமல் உள்ளே போகலாம் என்ற பிரச்னையை முத்துக்குமரன் முடிக்குமுன் டாக்ஸிக்காரன் சாதித்து முடித்து விட்டான். ‘‘உங்க ஐயாவுக்கு ரொம்ப நாள் சிநேகிதரு இவரு...’’ என்று டாக்ஸிக்காரன் கூறியதும், |