| ‘‘இருக்கட்டுமே! இப்ப அதைப்பத்தி என்ன? மலேயாவுக்கு நீயும் வரணும் மாதவி, நீ, நான் மூணு பேரும் பளேன்ல போயிடலாம். மத்தவங்க கப்பல்லே முன்னாலேயே பொறப்பட்டுடுவாங்க. ஸீன்ஸ்யெல்லாம்கூட முன்னாடியே கப்பல்லே அனுப்பிச்சிடணும்.’’ ‘‘நான் மலேயாவுக்கு வந்து என்ன செய்யப் போறேன் இப்ப? நீங்கள்ளாம் நடிக்கிறவங்க, நீங்க போகாட்டி நாடகமே நடக்காது; நான் வந்து எதைச் சாதிக்கப் போகிறேன்?’’- என்றான் முத்துக்குமரன். ‘‘அப்படிச் சொல்லப்படாது. நீயும் வரணும், நாளைக்கே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ண ஏற்பாடு செஞ்சிக்கிட்டிருக்கேன். இன்னிக்கு ராத்திரி அப்துல்லாவை இங்கே நம்ம பங்களாவுக்கு டின்னருக்கு அழைச்சிருக்கேன். அவரிட்ட ரெண்டொரு விஷயம் பேசிக்கிட்டா எல்லா ஏற்பாடும் முடிஞ்ச மாதிரிதான்.’’ ‘‘அதுக்கென்ன? செய்ய வேண்டியதுதானே?’’ ‘‘இப்படி யாருக்கு வந்த விருந்தோன்னு பட்டும் படாமலும் பதில் சொன்னா பிரயோசனமில்லை, எல்லாம் நீயும் சேர்ந்துதான்!’’ திடீரென்று கோபாலிடம் தன்னைச் சரிக்கட்டிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு வளர்ந்திருப்பதை முத்துக்குமரன் கண்டான். காரியத்தை எதிர்பாத்துச் செய்யப்படும் இத்தகைய செயற்கையான விருந்துகளை முத்துக்குமரன் எப்போதுமே வெறுத்தான். முத்துக்குமரனின் மனைநிலைகள் இது மாதிரி விஷயத்தில் எப்படி இருக்கு என்பதெல்லாம் கோபாலுக்கு நன்றாகத் தெரியும் என்றாலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான் கோபால். அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் மாதவி வந்து சேர்ந்தாள். அவளும் அன்றிரவு பினாங்கு அப்துல்லாவை விருந்துக்கு அழைத்திருப்பதைப் பற்றியே பேசினாள். பினாங்கு |