| தான் முதுகில் தட்டிக் கொடுக்கும் போதோ கண்களை அசைக்கும் போதோ அந்த உற்சாக குறுகுறுப்பின் எதிர் விளைவோ, வரவேற்போ அவள் முகத்தில் இல்லாததைக் கோபால்கூட அன்று கவனித்தான். கேட்கவும் செய்தான். ‘‘ஏன் என்னவோ போல இருக்கே?’’ - ‘‘ஒண்ணுமில்லே. எப்பவும் போலத்தானே இருக்கேன்?’’ - என்று சிரிக்க முயன்றாள் மாதவி. ‘‘ரைட்டோ! அப்ப நான் ஸ்டூடியோவுக்குப் புறப்படறேன். சொன்னதையெல்லாம் நீ கவனிச்சுக்க’’ - அவன் புறப்பட்டுப் போய் விட்டான். அவள் மனத்திலே ஒரு சிறிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது. பினாங்கு அப்துல்லாவைக் கோபால் இரவு டின்னருக்குத் தான் அழைத்திருந்தான். இரவு டின்னருக்கு அழைத்து வரவேண்டுமானால் அவரை மாலை ஏழு மணிக்கு மேல் அழைக்கப் போனால் போதும். ஆனால் கோபாலோ - ‘முன்னாலேயே போய் அவரிடம் உல்லாசமாகக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, - அழைத்துக் கொண்டுவா’ என்கிற தொனி இருந்தது. பெரும்பாலும் கோபால் தன்னை, ‘ஒரு நிமிஷம் இப்படி வந்துட்டுப் போயேன்’ - என்று கண்ணைச் சிமிட்டி அழைத்துக் கூப்பிட்டுச் சொல்லி விட்டுப் போன சமயங்களில் தான் எங்கெங்கே போய் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை எல்லாம் இந்த விநாடியில் நினைவு கூர்ந்தாள் அவள். அவற்றை இரண்டாவது முறையாக நினைப்பதற்கு இன்று அவளே அருவருப்பும் கூச்சமும் அடைந்தாள். முத்துக்குமரன் என்கிற கலைக் கர்வம் மிகுந்த கம்பீர நாயகனை அவள் சந்தித்துப் பழக நேரவில்லை என்றால் இன்றுகூட அந்தக் கூச்சமும் கர்வமும் அவளுக்குப் புரிந்திருக்கப் போவதில்லை. சிலரை |