பக்கம் எண் :

148சமுதாய வீதி

நினைத்து வாழத் தொடங்கிவிட்டபின், அதற்கு முன்னால் வாழ்ந்த விதங்களை
இரண்டாம் முறையாக நினைவுக் கூரவும் தயங்கும்படி அவர்கள் செய்து
விடுகிறார்கள். மாதவியும் முத்துக்குமரனுடன் பழகியபின் அப்படித்தான்
இருந்தாள்.

     கோபால் சொல்லிவிட்டுப் போயிருந்த வார்த்தைகளிலிருந்து தொனித்த
அர்த்தத்தின்படி செய்வதாயிருந்தால் மாதவி அப்போதே ஹோட்டலுக்குப்
புறப்பட்டுப் போய் அப்துல்லாவைச் சந்தித்திருக்க வேண்டும். பின்பு
அப்படியே அங்கிருந்து மாலை ஏழு மணிக்கு மேல் அப்துல்லாவை
அழைத்துக் கொண்டு வரவேண்டும். ஆனால் அவள் அன்று இப்படிச்
செய்யவில்லை. நேரே முத்துக்குமரனுக்கு எதிரே போய் நின்றாள். அவன்
கண்கள் அவளை நோக்கி நெருப்புக் கங்குகளாகக் கனன்றன. குரல் இடியாக
அதிர்ந்தது.

     ‘‘என்ன, போயிட்டு வந்தாச்சா? துரை மகன் மைனர் கணக்கா
கண்ணடிச்சுக் கூப்பிட்டானே!’’

     ‘‘நான் செய்த பாவம், உங்களுக்குக்கூட என்மேல் கோபம் வருகிறது.

     ‘‘அவன் கண்ணைச் சாய்ச்சுக் கூப்பிட்டவிதம் எனக்குக் கொஞ்சம்கூடப்
பிடிக்கவில்லை.

     ‘‘நான் என்ன செய்யட்டும் அதற்கு?’’

     ‘‘என்ன செய்யட்டும்னா கேட்கிறே. அதான் நாய்க்குட்டி மாதிரி
பின்னாடியே சிரிச்சுக்கிட்டு ஓடிப்போனியே! அதைவிட மோசமா இன்னும்
வேறே ஏதாவது செய்யணுமா என்ன?’’

     ‘‘திட்டுங்க, நல்லாத் திட்டுங்க...நீங்க எதை திட்டினாலும் எப்படித்
திட்டினாலும் எனக்குப் பிடிக்கும்? நாய்க்குட்டி பேய்க்குட்டின்னு என்ன
வேண்டும்னாலும் சொல்லுங்க...கேட்டுக்கறேன்...’’