பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி205

அப்துல்லா. எனவே விமான நிலையத்திற்குள்ளிருந்து புறப்பட்ட கார்கள் நேரே
பினாங்கு ஹில் ரயில் புறப்படும் இடத்திற்கு வந்து நின்றன. அந்தச் சிறிய
ரயிலில் செங்குத்தாக மேலே ஏறிப் பயணம் செய்வது மிகமிக உற்சாகமளிக்கும்
அநுபவமாயிருந்தது. அந்தச் சிறிய அழகிய பெட்டி இரயிலில் மாதவியும்,
முத்துக்குமரனும் அருகருகே அமர்ந்து கொண்டிருந்தனர். கீழே திரும்பிப்
பார்த்தபோது ரயில் புறப்படுமிடத்துக் கட்டிடமும், நகரின் சில விளக்குகளும்
சிறிய சிறிய புள்ளிகளாய் மங்கித் தெரிந்தன.

     மலைமேல் ஏறியதும் அப்துல்லாவின் பங்களாவிற்குப் போகிற
வழியிலிருந்து கீழே பள்ளத்தில் கடலும், பினாங்கு துறைமுகமும்,
பிறையிலிருந்து பினாங்குக்கும் பினாங்கிலிருந்து பிறைக்குமாக வந்து போகும்
ஃபெரி ஸர்வீஸு களுமாக விளக்குகள் மினுக்கின. நகரின் பல வண்ண
விளக்குகளும் நியான்ஸைன் காட்சிகளும் கண்கொள்ளா வனப்பை
அளிப்பனவாயிருந்தன. பினாங்கு ஹில் பார்க்கில் சிறிது நேரம்
உட்கார்ந்துவிட்டு அப்துல்லாவின் பங்களாவிற்குப் போய்ச் சேர்ந்தார்கள்
அவர்கள். அப்துல்லாவின் பங்களா மலையுச்சியில் அமைதியாகவும்
அடர்த்தியாகவும் இருந்த பகுதி ஒன்றில் அமைந்திருந்தது. மாடியில் தங்கிக்
கொள்ள ஒவ்வொருவருக்கும் சகல வசதிகளுமுள்ள தனித்தனி அறைகள்
ஒதுக்கப்பட்டன.

     இரவு உணவுக்குப் பிறகு ஹாலில் எல்லோரும் அமர்ந்து
பேசிக்கொண்டிருந்த போது, ‘‘என்ன மிஸ்டர் கோபால்! ‘காக்டெய்ல்’ மிக்ஸ்
பண்ணுவதில் இந்த மலேயா ‘ஸெடெ ரெயிட்ஸி’ லேயே நான் எக்ஸ்பெர்ட்
என்று பெயர். பல மாநில சுல்தான்கள் தங்கள் பிறந்த தின விழாக்களைக்
கொண்டாடும்போது காக்டெயில் மிக்ஸ் பண்ணுவதற்கென்றே எனக்கு விசேஷ
அழைப்பு