| 	 ஒரு நளினமான கவியின் மனத்தில் விளைகிற கர்வங்கள் அழகியவை.     அரளிப்பூவின் சிவப்புநிறம் கண்ணைக் குத்துகிறது. ரோஜாவின் சிவப்புநிறம்     கண்ணுக்குக் குளுமையாயிருக்கிறது. கவி அல்லாதவன் அல்லது ஒரு முரடனின்     கர்வம் அரளியின் சிவப்பைப் போன்றது. கவியாக இருக்கும் இங்கிதமான     உணர்ச்சிகளையுடைய ஒருவனின் கர்வம் ரோஜாப்பூவின் சிவப்பைப் போன்றது.     முத்துக்குமரனின் உள்ளத்திலும் அப்படி ஒரு மெல்லிய கர்வம் அந்தரங்கமாக     உண்டு. அதனால்தான் அவன் நண்பன் கோபாலை அந்நியமாகவும்,     தன்னைவிட உயரத்திலிருப்பவனாகவும் நினைக்கத் தயங்கினான். அவன் -     தனது உயரத்தை மறக்கவோ, குறைக்கவோ தயாராக இல்லை.                தான் அமர்ந்திருந்த சோபா, அந்த ஹால், அதன் பளிங்குத் தரை,     பாங்கான விரிப்புகள், அங்கே சௌந்தரிய தேவதைகளாக அமர்ந்திருந்த      அந்த யுவதிகள், அவர்களுடைய விதம் விதமான வடிவ வனப்புகள், மேனி     வாசனைகள், எல்லாம் சேர்ந்து - எல்லோரும் சேர்ந்து - அவனுள் சுபாவமாக     உறைந்து கிடந்த அந்த மெல்லிய கர்வம் பெருகவே துணை புரிந்தார்கள்.     மலராத பூவுக்குள் எங்கோ இருக்கும் வாசனை போல் தேடிக் கண்டு பிடிக்க     முடியாத இனிய கர்வம் அது.                -கோபால் இன்னும் ஹாலில் பிரவேசிக்கவேயில்லை. அவன் எந்த     விநாடியும் உள்ளே பிரவேசிக்கலாம். முத்துக்குமரனின் மனத்திலோ     கோபாலைப் பற்றிய பழைய சிந்தனைகள் கிளர்ந்தன. சில நாடகங்களில்     கதாநாயகன் வேஷம் போடுகிறவன் வரமுடியாத சமயங்களில் தானே     கதாநாயகனாக நடித்த போது செயற்கையாக நாணிக்கோணி அருகில் பெண்     வேஷத்தில் நின்ற கோபாலையும் இப்போது அந்த ஹாலுக்குள்     பிரவேசிப்பதற்கிருந்த கோபாலையும் இணைத்துக் கற்பனை  	 |