பக்கம் எண் :

214சமுதாய வீதி

வதற்கு என்ன காரணம் என்று மாதவிக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.
முத்துக்குமரன், கோபால் எல்லாருமே அதை ஜாடையாகப் புரிந்து
கொண்டுதான் இருந்தனர். கோபால் அப்துல்லாவையும் பகைத்துக்கொள்ள
முடியாமல் முத்துக்குமரனையும் பகைத்துக் கொள்ள முடியாமல் - ஆனால்
அதே சமயம் உள்ளூற முத்துக்குமரன் மேல் கடுங்கோபத்துடன் இருந்தான்.
மாதவி எல்லாரிடமும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும் - உள்ளூற
கோபால்மேலும் அப்துல்லாமேலும் மிகமிக கடுங்கோபத்தோடிருந்தாள்.
முத்துக்குமரனோ நண்பன் கூப்பிட்டான் என்பதற்காகத் தனக்குச்
சம்பந்தமில்லாத இந்தப் பயணத்தில் தான் தலையிட்டிருக்கக் கூடாதென்று
நினைக்கத் தொடங்கியிருந்தான். நினைப்பின் இடையே அடிக்கடி நண்பனின்
வேண்டுகோளுக்காக மட்டுமின்றி மாதவியின் - அன்பான வற்புறுத்தலுக்காகவும்
தான் வந்திருப்பதை அவனால் மறந்துவிட முடியவில்லை. உண்மையில் முழுக்
காரணத்தைக் கூற வேண்டுமானால் புதிதாகவும் மெய்யாகவும் கிடைத்த அவள்
பிரியத்தை உதற முடியாமல்தான் அவன் இந்த வெளிநாட்டுப் பயணத்துக்கு
உடன் புறப்பட்டிருந்தான்.

     சென்னையில் முதல் முதலாகச் சந்தித்த சந்தர்ப்பத்திலிருந்தே
அப்துல்லாவைத் தனக்கும், தன்னை அப்துல்லாவுக்கும் பிடிக்காமல் போக
நேர்ந்த கசப்பான சம்பவங்களை எல்லாம் இப்போது பினாங்கு மண்ணில்
வந்து இறங்கிய பின் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தான் முத்துக்குமரன்.
அப்போது நடந்தவற்றுக்கும் இப்போது நடப்பவற்றுக்கும் சம்பந்தமிருப்பது
புரிந்தது. அந்த வெறுப்புகளிலிருந்து தான் இந்த வெறுப்புக்கள் பிறந்திருக்க
வேண்டும். அந்த அலட்சியங்களிலிருந்துதான் இந்த அலட்சியங்களுக்கான
தூண்டுதல்கள் கிடைத்திருக்க வேண்டும் - என்று தோன்றியது.