பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி225

     முத்துக்குமரன் அருகில் நின்று இருவர் உரையாடலையும் கவனித்துக்
கொண்டிருந்தாலும் பேச்சில் தான் குறுக்கிட விரும்பவில்லை. மாதவிக்குத்தான்
கோபாலின் பேச்சு ஆத்திரமூட்டி விட்டது.

     ‘‘சீ! நீங்களும் ஒரு மனுசனாட்டம்...? ஒரு பொம்பிளை கிட்டவந்து
இப்பிடிக் கேட்க வெட்கமாயில்லை உங்களுக்கு?’’ என்று முற்றிலும்
எதிர்பாராதவிதமாக அவள் தன்னிடமே சீறியதைக் கண்டு கோபால்
திகைத்தான். இதுவரை அவள் தன்னிடம் இவ்வளவு கடுமையாகவும்,
மரியாதைக் குறைவாகவும் பேசியதில்லை என்று கடந்த காலத்தை நினைத்து
விட்டு - இன்று எவ்வளவு கடுமையாகப் பேச முடியுமோ அவ்வளவு
கடுமையாகப் பேசியும் விட்டாள் என்பதை உணர்ந்தபோது கோபாலுக்குத்
திகைப்பாக இருந்தது. எது செய்யச் சொன்னாலும் தான் காலால் இட்ட
கட்டளையைத் தலையால் செய்து கொண்டிருந்தவள் இன்று இவ்வளவு
ரோஷமும் மானமும் அடைந்து சீறுவதற்கு யார் காரணம் என்று
எண்ணியபோது மீண்டும் முத்துக்குமரன் மேல் அவனுடைய அவ்வளவு
கோபமும் திரும்பியது.

     ‘‘வாத்தியாரே! இதெல்லாம் உன் வேலைமானம் போலேருக்கு...?’’

     ‘‘அதுக்குத்தான் அப்பவே சொன்னேன்; நான் உங்க கூட இங்கே
வரலையின்னு...’’ - என்று முத்துக்குமரன் கோபாலுக்கு மறுமொழி கூறியதைக்
கேட்டு மாதவிக்கு முத்துக்குமரன் மேலேயே கோபம் வந்துவிட்டது.

     ‘‘இதுக்கு என்ன அர்த்தம்? நீங்க வந்ததினாலேதான் நான் மானம் -
ரோஷத்தோட இருக்கேன்? நீங்க வராட்டி நான் மானங்கெட்டுப் போய்த்
திரிவேன்னு அர்த்தமா?’’ என்று முத்துக்குமரனைப் பார்த்தே மாதவி சீறத்
தொடங்கினாள். சண்டை அவர்கள் இருவருக்குள்ளேயுமே