| ‘‘விருந்து நடந்த இடத்திலிருந்து திரும்பும்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. கோபாலும் அப்துல்லாவும் மொத்தமாக இவர்கள் இருவரையுமே புறக்கணித்தது போல் நடந்து கொண்டார்கள். இவர்களோ தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் புறக்கணித்ததுபோல் நடந்து கொள்ளத் தொடங்கினர். அதன் பின் பினாங்கில் நாடகம் நடந்த மூன்று தினங்களும் இதே நிலையில் பரஸ்பரம் - கோபால் மாதவியோடும் மாதவி முத்துக்குமரனோடும் - சுமூகமாகப் பேசிக் கொள்ளாமலே கழிந்தன. ஆறு மணியானதும் தியேட்டருக்குக் கார்களில் கூட்டமாகப் போகவும், கிரீன் ரூமுக்குள் நுழைந்து மேக்கப் போடவும், மேடையில் நடிக்கவும் நாடகம் முடிந்ததும் திரும்பவுமாக நாட்கள் போயின. அப்துல்லாவின் நைப்பாசையை வேறொரு வகையில் திசை திருப்பிவிட்டுச் சமாளித்துக் கொண்டிருந்தான் கோபால். தன்னுடைய குழுவிலேயே உபநடிகையாக இருந்த ‘உதயரேகா’ என்ற கட்டழகி ஒருத்தியை அப்துல்லாவோடு காரில் தனியே போகவும், அவருடைய அன்பைப் பெறவும் ஏவினான். உதயரேகா துணிந்த கட்டை. அவள் ‘தாராளமாகவே’ அப்துல்லாவைத் திருப்தி செய்து டேப்ரெகார்டர், டிரான்ஸிஸ்டர், ஜப்பான் நைலெக்ஸ் புடைவைகள், நெக்லெஸ், மோதிரம் என்று அவரிடமிருந்து பறித்துக் கொண்டிருந்தாள். முதல் நான் அநுபவத்துக்குப் பின் முத்துக்குமரன் - நாடகம் நடைபெற்ற இடத்திற்குப் போவதை நிறுத்திவிட்டு மாலையில் அறையிலேயே இருக்கத் தொடங்கினான். தனிமையில் அவனால் சில கவிதைகள் எழுத முடிந்தது. மற்ற நேரங்களில் - மலேயாவில் வெளி வரும் - இரண்டு மூன்று தமிழ்த் தினசரிகளையும் ஒரு வரி விடாமல் அவன் படித்தான். நல்ல வேளையாக - அந்த நாட்டில் வெளியாகும் ஒவ்வொரு தமிழ் தினசரியும் நாள் |