பக்கம் எண் :

228சமுதாய வீதி

தவறாமல் பத்துப் பன்னிரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் பெரிது பெரிதாக
வெளிவந்து கொண்டிருந்தது. மூன்று தினசரிகளையும் படிக்க அதிக நேரம்
செலவழிக்க முடிந்தது. பகல் நேரத்தில் குழு நடிகர்கள் சிலர் அவனிடம் வந்து
பேசிக் கொண்டிருப்பதும் உண்டு. இரண்டாவது நாளோ மூன்றாவது நாளோ
கோபால் நாடக மன்றத்தைச் சேர்ந்த ஒரு துணை நடிகன், ‘‘ஏன் சார், நீங்க
நாடகத்துக்கு வரதையே நிறுத்திட்டீங்க?..உங்களுக்கும் கோபால்
அண்ணனுக்கும் எதினாச்சும் மனஸ்தாபமா?’’என்று முத்துக்குமரனிடம் கேட்டே
விட்டான். முத்துக்குமரன் அவனுக்குப் பூசி மெழுகினார் போல் பதில்
சொன்னான்.

     ‘‘ஒரு நாள் பார்த்தாப் போதாதா என்ன தினம் பார்க்கணுமா? நாம
எழுதின நாடகம், நாமே சேர்ந்து நடிக்கிறோம். தினம் பார்க்கறதுக்கு என்ன
அவசியம்?’’

     ‘‘அப்பிடிச் சொல்லிடலாமா சார்? நாடகம் சினிமா மாதிரியில்லியே!
சினிமா ஒருவாட்டி காமிராவிலே புடிச்சு ஓட விட்டுப்பிட்டா அப்புறம்
அப்படியே ஓடிக்கிட்டிருக்கும். நாடகம் உசிர்க் கலையாச்சே? ஒவ்வொரு
நாளைக்கு நடிப்பிலே புது நயம், பாட்டுலே புது நயம்னு, நயம் நயமா
வந்துகிட்டே இருக்குமே?’’

     ‘‘வாஸ்தவம்தான்...’’

     ‘‘இப்ப பாருங்க...நேத்து நீங்க வரலே. முதல் நாள் நீங்க
வந்திருந்தீங்க...நீங்க வந்து பார்த்த அன்னிக்கி மாதவியம்மா நடிப்புப்
பிரமாதமா இருந்திச்சு, நீங்க வராததுனாலே நேத்து ரொம்ப டல்லா
இருந்தாங்க. நடிப்பிலே உற்சாகமே இல்லை...’’

     ‘‘நீ என்னைப் பெருமைப் படுத்தறதா நினைச்சுச் சொல்றே தம்பீ! ஆனா
அப்பிடி ஒண்ணும் இருக்காது. ‘மாதவி’க்கு ஒரு திறமை உண்டு. அது எப்ப
நடிச்சாலும் எதிலே நடிச்சாலும் ஒரே தரமா இருக்குமே?’’