பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி237

போகிறார்கள் என்பது பற்றிக் கவலைப்பட்டதாகவே காண்பித்துக்
கொள்ளவில்லை. உதயரேகாதான் மறுநாள் காலை எல்லாரிடமும்
பினாங்கிலிருந்து விமானத்தில் தான் அப்துல்லாவோடு வந்ததாகப்
பறையறைந்து கொண்டிருந்தாள். தன்னுடைய அந்தஸ்து உயர்ந்திருப்பதைக்
குழுவிலுள்ள மற்றவர்களுக்குத் தெரிவித்துவிட ஆசைப்பட்டாள் அவள்.
அப்படித் தெரிவதால் குழுவிலுள்ள மற்றவர்கள் தனக்குப் பயப்படவும்
மரியாதை செய்யவும் வழி உண்டு என்று அவளுக்குத் தோன்றியது போலும்.

                              18

     ஈப்போவில் முதல் நாள் நாடகத்திற்கு நல்ல வசூல் ஆயிற்று. இரண்டாம்
நாள் நாடகத்தன்றும் பரவாயில்லை. பினாங்கில் ஆன வசூல் ஈப்போவில்
ஆகவில்லை என்று கோபாலிடம் குறைபட்டுக் கொண்டார் அப்துல்லா.
இரண்டாம் நாள் நாடகத்தன்று மாலையில் நல்ல மழை பிடித்துக்
கொண்டதுதான் வசூல் குறைவிற்குக் காரணம் என்று கருதினான் கோபால்.

     ஈப்போவில் தங்கியிருந்த இரண்டு நாட்களில் பகல் நேரங்களில்
சுற்றுப்புறப் பகுதிகளில் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து விட்டார்கள்
அவர்கள். அடுத்து நாடகம் நடத்த வேண்டிய ஊர் கோலாலும்பூர், இடையில்
ஒரு நாள் ஓய்வு கொள்வதற்கு மீதம் இருந்தது.

     அப்துல்லாவும், உதயரேகாவும், கோபாலும் ‘கேமரான் ஹைலண்ட்ஸ்’ -
என்ற மலை வாசஸ்தலத்திற்குப் போகவிரும்பினார்கள். ஆனால் அந்த
ஒருநாள் ஓய்விற்குக் குழுவினர் அனைவரையும் அழைத்துச் செல்ல அவர்கள்
தயாராயில்லை.