பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி247

     முத்துக்குமரன் மேலும் தொடர்ந்தான்:

     ‘‘அப்துல்லாவும் விடமாட்டாரு. அவளுக்கும் இங்கே வந்து நம்ம
முகத்தையெல்லாம் பார்க்கிறதுக்கு வெட்கமாக இருக்குமில்லே...’’

     ‘‘வெட்கமென்ன இதிலே? கோபால் சாரிட்ட வர்ரத்துக்கு முந்தி
ஹைதராபாத்திலே அவ எப்படி இருந்தாளோ அப்பிடி இருக்கிறத்துக்கு இப்ப
மட்டும் என்ன வெட்கம்?’’

     ‘‘வீணா ஏன் அடுத்தவங்களைக் குறை சொல்றே...? அவளைக் குறை
சொல்லிப் பிரயோசனமில்லே. முதமுதல்லே யாராவது ஒரு அயோக்கியன்
அவளை இந்த லயன்லே கொண்டாந்து விட்டிருப்பான். வயித்துக் கொடுமை
நல்லது கெட்டது அறியாது!...இப்படிப்பட்டவங்க மேலே எனக்கு எப்பவுமே ஒரு
அநுதாபம் உண்டு மாதவி.

     அவள் உதயரேகாவைப் பற்றிப் பேசுவதை அவ்வளவில் விட்டு
விட்டாள். இன்னும் சிறிது நேரத்துக்கு அதே பேச்சைப் பேசினால் இறுதியில்
அது தன் வரை வந்து நின்று விடுமோ என்று அவளுக்கே உள்ளூர ஒரு
பயம் இருந்தது.

     முத்துக்குமரன் வேறு தன் பேச்சில், ‘‘முத முதலிலே யாராவது ஒரு
அயோக்கியன் அவளை இந்த ‘லயன்லே’ கொண்டாந்து விட்டிருப்பான்’’ என்று
அழுத்திக் கூறியிருந்தான். முன்பு எப்போதோ தான் முத்துக்குமரனிடம் பேசிக்
கொண்டிருந்தபோது, ‘‘என்னை இந்த லயன்லே கொண்டாந்ததே
கோபால்தான்’’ என்று தான் கூறியபோது ‘இந்த லயன்லேன்னா என்னா
அர்த்தம்?’ என்ற பதிலுக்கு இவன் கோபமாகக் கேட்டிருந்தது இப்போது
அவளுக்கு

     ஞாபகம் வந்தது. அதே மாதிரி இன்றும் ‘இந்த லயன்லே’ என்ற
வார்த்தையை அவனே உபயோகித்துவிட்டான். சாதாரணமாக அந்த
வார்த்தையை அவன் உபயோ