| அவன் வாய்விட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் அவளும் கலந்துகொண்டாள். ஊருக்குப் புறப்படுகிற தினத்தன்று காலையில் அவரவர்கள் ‘ஷாப்பிங்’ போனார்கள். ஒரு புடவைக் கடைக்குச் சென்றிருந்தபோது: ‘‘நான்கூட ஒரு புடவை வாங்கவேண்டியிருக்கு. உனக்கு முண்டு கொடுக்கணுமே’’ என்றான் முத்துக்குமரன். அவள் முகம் நாணத்தில் சிவந்தது. மாலையில் சிங்கப்பூரிலும் ஒரு பிரிவுபசார விருந்து இருந்தது. அதை முடித்துக் கொண்டு குழுவினர் அனைவரும் வருவதற்கான கப்பல் பயண ஏற்பாடுகள் பற்றி அப்துல்லாவிடம் கூறிவிட்டு கோபால், முத்துக்குமரன், மாதவி மூவரும் விமான நிலையம் புறப்பட்டனர். சென்னை செல்கிற ஏர் இந்தியா விமானம் ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து அப்புறம் அங்கிருந்து சென்னை புறப்பட வேண்டும். அன்றிரவு அது ஆஸ்திரேலியாவிலிருந்து தாமதமாகத்தான் வந்தது. அப்துல்லாவும், குழுவினரும், சிங்கப்பூர் ரசிகர்களும், அகாலத்தையும் பொருட்படுத்தாமல் விமான நிலையத்துக்கு வழியனுப்ப வந்திருந்தார்கள். விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்படும்போதே அதிக நேரமாகிவிட்டதனால் சென்னையை அடையும்போது இந்திய நேரப்படியே இரவு பன்னிரண்டரை மணி ஆகியிருந்தது. கஸ்டம்ஸ் ஃபார்மாலிடீஸ் முடிந்து வெளிவர ஒரு மணி ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் கோபாலுக்கும் மாதவிக்கும் வரவேற்புக்கூற இரசிகர்களும், விசிறிகளும், மாலைகளுடன் காத்திருந்தார்கள். அதில் ஒரு அரைமணி கழிந்துவிட்டது. கோபாலின் பங்களாவிலிருந்து கார்கள் வந்திருந்தன. ஒரு கார் நிறைய சாமான்கள் ஏறின. மறு காரில் அவர்கள் மூவரும் ஏறிக்கொண்டனர். வீடுபோய்ச் சேரும்போது ஏறக்குறைய இரண்டு மணி ஆகிவிட்டது. ‘‘இந்நேரத்துக்குமேலே வீட்டுக்குப் போவானேன்? இங்கேயே தூங்கிட்டுக் காலையிலே போயேன் மாதவி’’ என்று |