பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி29

செக்ரட்டரியைக் கலந்துக்கிடணும். ‘இன்கம்டாக்ஸ் - தொந்தரவு இல்லாமப்
போக வழியுண்டான்னு தெரிய வேண்டியது முக்கியம். அந்தத் தொந்தரவை
ஓரளவு குறைக்கிறதுக்காகத்தான் நான் இதைத் தொடங்கனும்னே முடிவு
பண்ணினேன். இதைத் தொடங்கினதினாலே அது அதிகமாயிடப்பிடாது.’

     ‘‘ஓகோ! ஒரு கலைக்குப் பின்னால் கலையல்லாத இத்தனை
காரணங்களை யோசிக்கணும்...என்ன?’’

     ‘‘கலையாவது ஒண்ணாவது. கையைப் பிடிக்குமா, பிடிக்காதான்னு
முதல்லே பார்க்கத் தெரிஞ்சுக்கணும்?’’

     ‘‘ஓகோ! புதுசா இப்பத்தான் நான் இதெல்லாம் கேள்விப்படறேண்டா
கோபாலு.’’

     என்னதான் சுபாவமாகவும் சகஜமாகவும் பழகினாலும் கோடீஸ்வரனாகவும்,
நடிகர் திலகமாகவும் ஆகிவிட்ட தன்னை முத்துக்குமரன் ‘அடாபிடா’
போட்டுப் பேசுவதைக் கோபால் ரசிக்கவில்லை. ஒவ்வொரு ‘டா’வும் முள்ளாகக்
குத்தியது. ஆனால், அதே சமயத்தில் முத்துக்குமரனின் கவிதைச் செருக்கும்,
தன்மானமும், பிடிவாதமும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தவை. ஆகவே,
முத்துக்குமரனுக்கு அவன் பயப்படவும் செய்தான். பதிலுக்குப் பழி வாங்குவது
போல் தானும் அவனை ‘அடா’ போட்டுப் பேசலாமா என்று ஒருகணம்
குரோதமாகத் தோன்றினாலும் அப்படிச் செய்யத் தைரியம் வரவில்லை. நீ,
நான் போன்ற ஒருமைச் சொற்களும் ‘வாத்தியாரே’ போன்ற பெயரும்தான்
தைரியமாகக் கூற வந்தன. முத்துக்குமரன் என்ற, தைரியசாலியோடு மேடையில்
ஸ்திரீ பார்ட் போட்ட காலங்களில், ‘நாதா! தங்கள் சித்தம் என் பாக்கியம்’
என்று நாணிக் கோணிக்கொண்டு அன்று கூறிய நிலையே இன்னும் நீடித்தது.
முத்துக்குமரனை மீறி நிற்க முடியாத மனநிலை இன்னும் அவனிடம் இருந்தது.
அந்தப் பிரமையிலிருந்து அவனால் இன்னும் விடுபட முடிய