‘‘பின்னே என்னதான் எழுதப்போறே? எப்பிடி எழுதப் போறே?’’
‘‘நாடகத்தை - நாடகமாகவே எழுதப் போகிறேன் அவ்வளவுதான்.’’
‘‘அது எடுக்கணுமே...?’’
‘‘எடுக்கறதும் - எடுக்காததும் நாடகத்தைச் ‘சிறப்பா’ அமைக்கிறதுலேதான் இருக்கே ஒழிய நாடகத்துக்குச் சம்பந்தமில்லாததுலே மட்டும் இல்லே.’’
‘‘எப்படியோ உன்பாடு...நீ வாத்தியார். அதனாலே நான் சொல்றதைக் கேட்கமாட்டே?’’
‘‘எந்தக் கதாபாத்திரத்தை யார் யார் நடிக்கிறதுங்கறதில இருந்து எத்தினி சீன் வரணும், எவ்வளவு பாட்டு, எல்லாத்தையும் நீ என் பொறுப்பிலே விடு. நான் வெற்றி நாடகமாக இதை ஆக்கிக் காட்டாட்டி அப்புறம் என் பெயரு முத்துக்குமார் இல்லே...’’
‘‘சரி! செய்து பாரேன்...இப்ப சாப்பிடப் போகலாமா?’’
இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு அப்புறமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அதன்பின் கோபால் தன் அலமாரியைத் திறந்து - வண்ண வண்ணமாக அடுக்கியிருந்த பாட்டில்களில் இரண்டையும் - கிளாஸ்களையும் எடுத்தான்.
‘‘பழக்கம் உண்டா வாத்தியாரே?’’
‘‘நாடகக்காரனுக்கும், சங்கீதக்காரனுக்கும் இந்தக் கேள்வியே வேண்டியதில்லே கோபால்.’’
‘‘வா! இப்படி உட்காரு வாத்தியாரே’’ என்று கூறிக் கொண்டே டேபிளில் கிளாஸ்களையும், பாட்டில்களையும், ‘ஓபனரை’யும் வைத்தான் நடிகன் கோபால். அதன்பின் அவர்கள் பேச்சு வேறு திசைக்குப் போயிற்று. மாலையில் இண்டர்வ்யூவுக்கு வந்திருந்த பெண்களைப் |