பக்கம் எண் :

36சமுதாய வீதி

     ‘‘இந்த அகாலத்தில் எங்கேயிருந்து பேசறே? நான் இந்த அவுட்
ஹவுஸ்லே ஃபோனில் கிடைப்பேன்னு எப்பிடி உனக்குத் தெரியும்...?’’

     ‘‘அங்கே கோபால் சார் வீட்டிலே டெலிபோன் போர்டிலே இருக்கிற
பையனைத் தெரியும்...’’

     ‘‘அவனைத் தெரியும்கிறதனாலே இந்த அகாலத்திலே ஒரு பெண் இப்படி
ஃபோனில் குழையலாமா? நாலுபேர் என்ன நினைப்பாங்க - ’’

     ‘‘என்னவேணா நினைக்கட்டுமே? என்னாலே பொறுத்துக்க முடியலே.
கூப்பிட்டேன்...அது தப்பா?’’

     - கடைசி வாக்கியத்தில் கேள்வியின் தொனி வெல்லமாய் இனித்தது.
கேட்பவனுக்கு அந்த நயம் மதுவின் போதையைவிட அதிகமான போதையை
அளித்தது. உலகின் முதல் மதுவே பெண்ணின் இதழ்களிலும், குரலிலும்தான்
பிறந்து ஊற்றெடுத்திருக்க வேண்டும் போலும். முத்துக்குமரனுக்கு அவளோடு
பேசி முடித்த போது மனம் நிறைந்து பொங்கி வழிகிறாற் போலிருந்தது.
கொஞ்சம் சுயப்ரக்ஞையோடு அவள் எதற்காக ஃபோன் செய்தாள் என்று
நினைத்தபோது நினைவில் அவள்தான் மீதமாகக் கிடைத்தாளே ஒழிய, அவள்
ஃபோன் செய்த காரணம் கிடைக்கவில்லை. தனக்கு ஃபோன் செய்து
தன்னுடைய அன்பையும், தயவையும், பிரியத்தையும் சம்பாதித்துக் கொண்டால்
- தான் அவளை நாடகக் குழுவில் ஒரு நடிகையாகத் தேர்ந்தெடுக்கச் சொல்லி
கோபாலிடம் சிபாரிசு செய்யலாமென்பதற்காக மறைமுகமாய் இப்படி ஃபோன்
செய்து தூண்டுகிறாளோ என்ற சந்தேகம் ஒரு கணம் எழுந்தது. அடுத்தகணமே
அப்படி இருக்காதென்றும் தோன்றியது. தனக்கு அவள் போன் செய்ததற்குத்
தன்மேல் அவள் கொண்டிருக்கும் பிரியத்தைத் தவிர வேறெதுவும் காரணமாக
இருக்க முடியாதென்று நினைத்த உறுதியில் முன் நினைவு அடிபட்டுப்